தமிழ் அறிவோம்!
" மனைவி அமைவதெல்லாம் "
திருமணமாகாத ஆண்கள் அனைவருக்குமே தன் வருங்கால மனைவி " அப்படி இருக்கவேண்டும். இப்படி இருக்கவேண்டும் " என்று எண்ணற்ற கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாமே நடப்பது இல்லை. அதற்கான காரணம் எனன தெரியுமா? " மனைவி அமைவதெல்லாம் இறைவன் ( இயற்கை) கொடுத்த வரம் ( பேறு) " என்பார்களே அதுதான் அதற்கான காரணமாகும்.
திருமணமான பெரியவர் ஒருவரும், திருமணமாகாத இளைஞர் ஒருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறார்கள். நீண்ட நாள்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்த இளைஞனைப் பார்த்து, " தம்பி ! உனக்கு அகவை கூடிக்கொண்டே போகிறதே நீ ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? " என்று கேட்டார் பெரியவர். " என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிக்கலை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு இருக்கின்ற சிக்கல்கள் போதாதென்று திருமணம் வேறு தேவையா? என்று கேட்டான் அந்த இளைஞன். " இந்த அகவையில் உனக்கென்ன சிக்கல் இருக்கப் போகிறது?" என்று கேட்டார் பெரியவர். " ஒன்றா? இரண்டா? சொல்வதற்கு ஓராயிரம் இருக்கிறது " என்றான் அந்த இளைஞன். " சரிப்பா உன் வாழ்க்கையில் நீ எதிர்கொள்ளும் சிக்கல்களை எல்லாம் ஒவ்வொன்றாய்ச் சொல் " என்று அந்த இளைஞனிடம் கூறிவிட்டு ஒரு வெள்ளைத்தாளையும், ஓர் எழுதுகோலையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.
" திறமைக்கு ஏற்ற வேலை இல்லை. வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. வாங்குகின்ற ஊதியம் வாழ்க்கையை நடத்த போதவில்லை " என்று தான் எதிர்கொள்ளும் சிக்கல்களை எல்லாம் அடுக்கடுக்காகச் சொன்னான் அந்த இளைஞன். தான் எதிர்கொள்ளும் சிக்கல்களை எல்லாம் இளைஞன் சொல்லச் சொல்ல, அந்தச் சிக்கல்களுக்குத் தகுந்தாற்போல பெரியதும், சிறியதுமாய் அந்த வெள்ளைத்தாளில் வரிசையாக கோடு போட்டுக் கொண்டார் அந்தப் பெரியவர். தன் சிக்கல்களை எல்லாம் மொத்தமாகச் சொல்லி முடித்தான் அந்த இளைஞன். இருபதுக்கும் மேற்பட்ட கோடுகளைப் போட்டு வைத்திருந்தார் பெரியவர். கடைசியாக ஒரு பெரிய கோட்டைப் போட்டார். இந்தப் பெரிய கோட்டைப் பார்க்கும்போது இந்தச் சின்ன கோடுகள் எல்லாம் உன் கண்ணுக்குத் தெரிகிறதா? என்று அந்த இளஞனைப் பார்த்துக் கேட்டார் பெரியவர்." சிறிய கோடுகளை எல்லாம் பெரிய கோடு மறைத்துவிட்டதால் , என் கண்ணுக்குப் பெரிய கோடு மட்டுமே தெரிகிறது " என்றான் இளைஞன். " தம்பி! இந்தப் பெரிய கோடுதான் மனைவி. ஆம் . நீ திருமணம் செய்துகொள். உனக்கு மனைவி என்று ஒருத்தி உன் வாழ்க்கையில் வருவாள். அதன்பின் மனைவி மட்டுமே உனக்குச் சிக்கலாகத் தெரிவாள். மற்றபடி உனக்கு வருகின்ற எல்லாச் சிக்கல்களும் அந்தச் சிறிய கோட்டைப்போல காணாமல் போய்விடும் " என்றார் அந்தப் பெரியவர். " தன் மனைவி மூலமாகப் பல சிக்கலை எதிர் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்தப் பெரியவர் இப்படிச் சொல்கிறாரோ? என்று எண்ணிக் கொண்ட அந்த இளைஞன் , " ஒருவேளை இந்தப் பெரியவருக்குக் கிடைத்த மனைவியைப் போல நமக்கு ஒரு மனைவி கிடைத்தால் நம் நிலைமை என்னாவது? " என்று நினைத்து வருந்தினான் திருமணமே வேண்டாமென்று முடிவெடுத்தான்.
திருமணம் செய்துகொண்டு அதனால் பல இன்னல்களை எதிர்கொண்டு, " நாம் கொஞ்சம்கூட சிந்திக்காமல் திருமணம் செய்துகொண்டோமே? சிக்கலில் மாட்டிக் கொண்டோமே ?" என்று புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப் புலம்புகிறவர்களைப் பார்த்து " நம் வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் " என்று முடிவெடுத்தவர்களும் பலர் இருக்கிறார்கள். "மனைவி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் . இதுபோன்ற ஒரு நல்ல பெண் தனக்கு மனைவியாகக் கிடைத்தால் நான் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வேன் " என்று கேட்பவர்களுக்கு கலிங்கத்துப்பரணியில் வருகின்ற ஒரு மனைவியைச் சான்றாகச் சொல்லலாம்.
"தரைமகள் தன்கொழுநன் தன்உடலம் தன்னைத்
தாங்காமல் தன்உடலால் தாங்கி விண்நாட்டு
அறமகளிர் அவ்வுயிரை புணரா முன்னம்
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின்! காண்மின்!
( ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணி - 483)
போர்க்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்ற பெண்ணொருத்தி , அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து தன் கணவன் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். மண்ணில் அவனுடல் வீழ்ந்துவிடாது மடியில் இருத்திக்கொண்டு அவனுயிர் பிரியும்முன் தன்னுயிர் விடுகிறாள். ஏன் தெரியுமா?
மண்ணாகிய நிலமகளும் ஒரு பெண்ணாதலால் தன் கணவனைத் தீண்ட விடாது மடியில் சுமந்து கொண்டாள். மேலும் அவளுக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. தன் கணவன் இறந்த பிறகு அவன் உயிர் விண்ணுலகம் செல்லும். அப்படிச் சென்றால் அங்கே உள்ள விண்ணாட்டு அறமகளிர் தன் கணவனைத் தீண்டுவார்கள். அப்படி அவர்கள் தீண்டக் கூடாது என்றெண்ணி அவனை வரவேற்க இவள் முந்திக் கொள்கிறாள். ஆம் , தன் கணவன் உயிர் தனியாகப் போனால்தானே அவ்வாறு நடக்கும். தன் கணவன் உயிர்விடும் முன்னே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? என்றெண்ணித் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாளாம். தன் கணவன் மீது அளவற்ற அன்புகொண்டு அவனுக்காகத் தன் உயிரையே விட்ட அன்பு மனைவியைப் பாருங்கள் ( காண்மின்) . பாருங்கள் என்கிறது கலிங்கத்துப்பரணி.
கலிங்கத்துப்பரணி பாடலில் வருகின்ற மனைவியைப்போல தனக்காக உயிரைவிடும் மனைவியே தங்களுக்கு வேண்டும் என்று உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுமே நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அப்படி கிடைப்பதில்லை. ஏன் தெரியுமா?
" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்