Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " மத்துறு தயிர் "

 தமிழ் அறிவோம்!


" மத்துறு தயிர் " 




ஒரு அடுக்ககத்தின்  பக்கத்தில்  புதிதாகக் கட்டடம்  கட்டும் பணி நடைபெற்றது. அங்கே எண்ணற்றத் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள்.  நண்பகல் வேளையில் உணவு உண்ண அவர்கள் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்தனர்.  முதியவர் ஒருவர் இரண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்துப் பிரித்தார். ஒன்றைத் தனக்கு முன் வைத்தார். இன்னொரு பொட்டலத்தைத் தனக்குப் பக்கத்தில வைத்தார்.  " நான் உணவு உண்ணப் போகிறேன். நீயும் உணவு உண்பாயாக " என்று யாரிடமோ சொல்வதைப்  போல சொல்லிவிட்டு அவர் உணவு உண்ணத் தொடங்கினார்.  இதை அருகில் இருந்த இளைஞன் ஒருவன்  கவனித்தான். நண்பகல் உணவு உண்ணும் போதெல்லாம் அந்த முதியவர் இதையே நாள்தோறும் செய்தார் அந்த முதியவர். ஒருநாள்  அந்த முதியவரிடம் சென்று, " ஐயா!  நீங்கள் உணவு உண்ணும்போது இன்னொரு உணவு பொட்டலத்தைப் பிரித்து வைத்து யாரையோ உண்ணச் சொல்கிறீர்களே! அது யார்? என்று கேட்டான் அந்த இளைஞன். " என் மனைவியிடம் சொன்னேன் " என்றார் முதியவர்.  


" உங்கள் மனைவியிடமா ? அப்படி யாரும் அருகில் இல்லையே? என்று கேட்டான் அந்த இளைஞன்.  " அவள் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.  எனக்கு இருபது அகவை இருக்கும்போது திருமணம் நடைபெற்றது. திருமணமான ஆறாவது திங்களிலேயே நோய்வாய்ப்பட்டு என் மனைவி இறந்துவிட்டாள். எங்கள் இல்லற வாழ்க்கை ஆறு திங்களில் முடிந்தது. ஆனால்,  ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தது போன்ற நினைவுகளை எனக்குத்  தந்தது. அவள் மண்ணைவிட்டு மறைந்தாலும் என் மனதைவிட்டு மறையவில்லை. வேறு திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. இன்னும் அவள் நினைவோடுதான் வாழ்ந்து வருகிறேன்.  உண்ணும்போது மட்டுமல்ல,  நான் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் என் மனைவி என்னுடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன். அவள் என்னோடு வாழ்ந்த காலத்தில் உணவு  உண்ணும்போது இருவரும் சேர்ந்தே உண்போம். அந்த நினைவில்தான் நான் எப்போது உணவு உண்டாலும் அவள் என்னோடு சேர்ந்து உணவு உண்பதாக நினைத்துக்கொண்டே  அவளுக்கும் உணவை வைத்துவிட்டு நான் உண்பேன். நான் உணவு உண்டபின் அவளுக்கு வைத்த உணவை எடுத்துச் சென்று காகங்களுக்கு வைத்து விடுவேன். எனக்கு அகவை இப்போது 71 ஆகிறது. நான் இங்கு காவலாளியாகப் பணியாற்றுகிறேன். " என்று தன் கதையைக் கூறி முடித்தார் அந்த முதியவர்.  " தன்  மனைவியின் மீது மாறாத அன்புகொண்ட இந்த முதியவரின் காதல் கதையைக் காப்பியமாகப் படைக்க  கம்பன் இல்லையே " என்று வருந்தினான் அந்த இளைஞன். 


"மனைவி போனால் எல்லாம் போகும் " என்பார்கள். மனைவியைப் பிரிந்து வாடும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும் மனைவியின் அருமையும், பெருமையும். " இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை " என்ற நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைவது எப்போது தெரியுமா? மனைவியை இழந்த பின்புதான். ஒருவன் தன்மனம் முழுவதும் நிறைந்துவிட்ட மனைவியை பிரிந்து வாடும்போது அவன் மனம் படும்பாட்டை யாரால் பாட ( சொல்ல)  முடியும்?  " கவிச்சக்கரவர்த்தி " கம்பரால் மட்டுமே பாட முடியும். 


"மத்துறு தயிர் என வந்து சென்று, இடை

தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்

பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,

எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?"


( கம்பர்,  கம்பராமாயணம், சுந்தர காண்டம் - 50) 


" உன்னுடைய. பிரிவினால் இராமன் அடைந்துள்ள துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. ஐம்புலன்களும் தன் செயலற்று , உணர்ச்சியற்றுப் பித்துப் பிடித்தவன் போலிருக்கிறான். மத்தினால் கடையப்பெறும் தயிர் எப்படிக் குழம்புமோ  அப்படிக் குழம்பியிருக்கிறான். " என்று சீதையைப் பிரிந்து இராமன் படும்பாட்டை  சீதையிடம் கூறுகிறான் அனுமன். 


" மத்துறு தயிர் " என்ற கம்பனின் சொல்லாடலைப் பாருங்கள். எவ்வளவு அழகான உவமை. தயிரைக் கடையும்போது மத்தானது தயிரைச் சுழற்றி சுழற்றி அடிக்கும்.  துமி தெறிக்க பேரொலி பிறக்கும். மனத்தின் வேதனையை இச்செயலோடு ஒப்பிடுவதற்கு கம்பனால் மட்டுமே முடியும். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,  

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்