தமிழ் அறிவோம்!
"விளையாட்டுதுணையாகும் "
ஒரு காட்டில் பல விலங்குகள் இருந்தன. " இந்தக் காட்டில் உள்ள விலங்குகளில் நான் மட்டுமே வேகமாக ஓடுவேன். மற்ற விலங்குகளால் எனக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமாக ஓட முடியாது " என்று செறுக்குடன் இருந்தது முயல். ஒருநாள் எல்லா விலங்குகளிடமும் சென்று" என்னுடன் ஓட்டப்போட்டிக்கு வாருங்கள் " என்று அழைத்தது முயல். அதனுடன் போட்டி போட முடியாது என்பதை உணர்ந்துகொண்டு போட்டிக்கு வர எல்லா விலங்குகளும் தயங்கின ஆமை மட்டும் அதனுடன் போட்டி போட நினைத்தது. முயலின் செறுக்கினை அடக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியில் பங்கேற்க நினைத்தது. அதனால் போட்டியில் பங்கேற்க ஆமை ஒப்புக்கொண்டது. போட்டியின் தொடக்க இடமும் , முடிவு இடமும் உறுதி செய்யப்பட்டது . எல்லா விலங்குகளின் முன்னிலையில் போட்டி தொடங்கப்பட்டது முயலும், ஆமையும் வெற்றிக்கோட்டை நோக்கி ஓடின. முயல் மிகவும் வேகமாக ஓடியது. வெற்றிக்கோட்டைத் தொடுகின்ற இடத்தை நெருங்கும் முன் முயல் திரும்பிப் பார்த்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஆமை வருவது தெரியவில்லை. எப்படியும் நாம்தான் போட்டியில் வெற்றி பெறப் போகிறோம் என்ற செறுக்கில் சற்று நேரம் தூங்கி ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தது முயல். அதனால் அருகில் இருந்த மரத்தின் அடியில் படுத்து தூங்கியது . சிறிதுநேர தூக்கத்திற்குப் பின் கண்விழித்து பார்த்தது முயல். ஆமை வெற்றிக்கோட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. பதற்றமடைந்த முயல் வேகமாக எழுந்து வெற்றிக்கோட்டை நோக்கி பாய்ந்து ஓடியது. அதற்குள் ஆமை வெற்றிக்கொட்டை தொட்டுவிட்டது. போட்டியின் வெற்றியாளர் ஆமைதான் என்று எல்லா விலங்குகளாலும் அறிவிக்கப்பட்டது. சுறுசுறுப்பாக இருந்த ஆமை போட்டியில் வெற்றி அடைந்தது. சோம்பேறித்தனமாக இருந்த முயல் போட்டியில் தோல்வியடைந்தது . இந்த முயல் ஆமை கதை உலகத்துக்கே தெரிந்தது தானே என்று நீங்கள் நினைக்கலாம். கதை இத்துடன் முடியவில்லை. இந்தக் கதைக்கு இரண்டாம் பாகம் இருக்கிறது. அதை இப்போது பார்ப்போம்.
முயலும், ஆமையும் ஒரே பள்ளியில் படித்தன. தங்கள் பள்ளி வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தன. பள்ளி இறுதித் தேர்வில் முயல் அதிக மதிப்பெண் பெற்றது. ஆமையோ குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தது. முயலும், ஆமையும் மேற்படிப்பு கற்க கல்லூரியில் சேர நினைத்தன. இருவரும் ஒரே கல்லூரியில் விண்ணப்பித்தன . அந்தக் கல்லூரியில் ஆமைக்கு இடம் கிடைத்தது. முயலுக்கு இடம் கிடைக்கவில்லை. அன்று விளையாட்டில் ஆமையிடம் தோற்றோம். இன்று கல்லூரி சேர்க்கையில் மீண்டும் ஆமையிடம் நாம் தோற்றுவிட்டோமே என்று எண்ணி வேதனை அடைந்து வெகுண்டெழுந்தது முயல். கல்லூரி முதல்வரிடம் சென்று, " எனக்கு ஏன் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை? நான்தான் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கின்றேனே? என்று கேட்டது. அதற்கு கல்லூரி முதல்வர், " உன்னைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் உனக்கு இடம்தர இயலவில்லை " என்றார் . அப்படியென்றால் என்னை விட மிகக் குறைவான மதிப்பெண் பெற்ற ஆமைக்கு ஏன் இடம் கொடுத்தீர்கள்? என்று கல்லூரி முதல்வரைப் பார்த்துக் கேட்டது முயல். அதற்கு கல்லூரி முதல்வர் , " கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் விளையாட்டு வீரர்களுக்கென்று குறிப்பிட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த இடத்தைத்தான் ஆமைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டப்போட்டியில் உன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆமை வைத்திருந்தது. அந்தச் சான்றிதழ் அடிப்படையில்தான் விளையாட்டு பிரிவுக்கான ஒதுக்கீட்டில் இந்தக் கல்லூரியில் சேர்வதற்காக ஆமைக்கு இடம் கொடுக்கப்பட்டது " என்றார் கல்லூரி முதல்வர். இதைக்கேட்டதும் மன வேதனையுடனும் , ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பியது முயல்.
எந்த ஒரு செயலையும் நாம் விளையாட்டாக எண்ணிக்கொண்டு செய்தால் , அதுவே நமக்கு வினையாகும் என்பதையே " விளையாட்டு வினையாகும் " என்றார்கள் நம் முன்னோர்கள்.ஆனால், இந்த முயல் ஆமை கதையில் நாம் உணர வேண்டியது என்ன தெரியுமா? முயலுக்குத்தான் விளையாட்டு வினையானது. ஆமைக்கோ விளையாட்டு துணையானது.
" விளையாட்டில் நாம் முழு ஈடுபாட்டுடன் இருந்தால் , அந்த விளையாட்டு நம் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் " என்பதையே இந்த முயல் ஆமை கதை நமக்கு உணர்த்துகிறது.
இந்த காலத்தில் குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று சொல்லிச்சொல்லியே விளையாட்டை ஒரு விளையாட்டாக நினைத்துக்கொண்டு அதை ஓரங்கட்டி விட்டோம். அதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? மைதானத்தில் விளையாட வேண்டியவர்கள் , மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இக்காலக் குழந்தைகள். நல்ல மனிதர்களாக மாற வேண்டியவர்கள் மன அழுத்தத்தால் விலங்குகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
" ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கல் ஆகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!"
என்று விளையாட்டின் அருமையை பாப்பாவுக்குச் சொல்வதைப் போல, இந்தப் பாருக்கே சொல்லி இருக்கிறார் பாரதியார். காலையில் படிப்பு. மாலையில் விளையாட்டு. இந்த வழக்கத்தை மாற்றியதால்தான் இன்று வையகமே தலை கீழாக மாறிவிட்டது. உங்கள் குழந்தைகள் நல்ல உடல்நலத்துடனும் , நல்ல மனநலத்துடனும் நீண்ட காலம் வாழவேண்டும் என்றால், மாலை முழுவதும் விளையாடச் சொல்லுங்கள். படிப்பும் வேண்டும். விளையாட்டும் வேண்டும் என்று எடுத்துச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறந்து விளங்கச் சொல்லுங்கள். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சிலருக்குக் கல்வி கைகொடுக்காமல் போகலாம். அவர்களுக்கு எல்லாம் விளையாட்டு கைகொடுக்கும். ஆம், " விளையாட்டு துணையாகும் "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்