நெல்லி இலையுதிர்ந்து நிற்பதெவன்?
ஒருமுறை ஔவையார் ஓர் ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தார். களைத்துப்போன அவர், அவ்வூரின் மன்றத்திடத்தே சென்று அமர்ந்தார். அப்போது அங்கே இருந்தவர்கள் அவரைக் கற்றறிந்த புலவர் என அறிந்து கொண்டனர். அதனால் அவரைப் போற்றி வணங்கி நின்றனர்.
அப்போது, அங்கே ஒருவன் வந்தான். அவன் 'தீயவன்' என்பதை அவன் முகக்குறிப்பினால் அறிந்து கொண்டார் ஔவையார். . ஆனால், அவன் அந்த மன்றத்தே நீதிமானாகப் பணியாற்றி வருபவன் ஆவான். அவனைக் கண்ட எல்லாரும் எழுந்து நின்றனர்.
ஔவையார் அவன் வந்ததைக் கவனியாதவரைப்போல, எதிரே இலையுதிர்ந்துபோய் நின்ற ஒரு நெல்லி மரத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார். வந்தவன், ஔவையார் தன்னை மதியாமல் இருப்பதைப் புரிந்துகொண்டான். 'கல்வி உடையவரே ! இவ்விடத்தே இருக்கும் பெரிதான நெல்லி மரமானது, இலையுதிர்ந்து மொட்டையரக நிற்பதுதான் எதனாலோ?' என்று கேட்டான். பிற மரங்கள் இலைச்செறிவுடன் விளங்க, நெல்லிமரம் மட்டும் மொட்டையாக நிற்பதுதான் ஔவையார் அதையே உற்றுப் பார்ப்பதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவன் கணிப்பு ஆகும். ‘ வெற்றி பெறாத வழக்கினை, அதனை வெற்றிபெறச் செய்வதற்குக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, வெற்றிபெறச் செய்கின்ற வல்லாண்மையுடையவன் சுற்றம் கெட்டழியும், வல்லவனே! நெல்லிமரம் பட்டுப்போய் இப்படி விளங்குவது, கைக்கூலி வாங்கியவனின் சுற்றம் மாண்டுபோய்விடும் என்பதைக் காட்டவேதான் " என்றார் ஔவையார். ஔவையாரின் விடையைக் கேட்டதும் அவன் தலை கவிழ்ந்தான். அன்றுமுதல் , அழி ( பொய் ) வழக்குப் பேசுவதையும் அறவே விட்டுவிட்டான்.
"கல்வி உடையீர் கருங்கான கத்திடையே
நெல்லி இலையுதிர்ந்து நிற்பதெவன்? - வல்லாய்கேள்,
வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம்போல் மாண்டு. "
( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 70)
“கல்வி அறிவு உடையவரே அடர்ந்த காட்டினிடையே நெல்லி மரமானது இலையுதிர்ந்து பட்டுப்போனதாக நிற்பது எதனாலோ?
வல்லவனே! கேட்பாயாக, வெல்லுதற்கு உரியது அல்லாத வழக்கினை விலை ( கையூட்டு) பெற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்விக்கும் வல்லமை கொண்டவனின் சுற்றத்தைப்போல, அதுவும் மாண்டு போயிருக்கிறது. அதாவது, அழி ( பொய் ) வழக்குச் சொல்பவன் தன் குடும்பத்தோடும் , சுற்றத்தோடும் கெட்டழிவான்" என்பதை உறுதிபடக் கூறுகிறார் ஔவையார்.
சட்டத்தைக் காக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் , ஏழைக்கு ஒரு நீதி, ஏமாற்றிப் பிழைப்பவனுக்கு ஒரு நீதியென்று சொல்லி கையூட்டு பெற்றுக் கொண்டு, இன்று நீதியைக் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் குடும்பமும், சுற்றமும் வேரோடு அழிந்து போகும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழகாகச் சொல்லியிருக்கிறார் ஔவையார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்