நடுகல் எனும் நன்றி மறவாப் பண்பாடு
பகுதி -3
கோழி நடுகல்
ஏறு தழுவுதல் போலவே கோழிச்சண்டையும் வீர விளையாட்டாகத் தமிழரிடையே போற்றி பிறப்பிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் விழுப்புரம் செஞ்சி சாலையில் அமைந்துள்ள அரசலாபுரத்தில் 62×50செ.மீ அளவுள்ள கற்பலகை ஒன்றில் அழகிய சேவலின் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சேவலின் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் வட்டெழுத்திலான கி.பி 3-6 ம் நூற்றாண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.1992 ம் ஆண்டு ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கை ராகவன் ஆகியோர் இதை கண்டுபிடித்தார்கள்.
கல்வெட்டு:
1. முகையுரு மேற்சேரி
2. (கு) யாடிக் க
3. ருகிய கோழி
செய்தி:
முகையுருவைச் சேர்ந்த மேற்சேரிக்காகச் சண்டையிட்டு வெற்றிப்பெற்ற பின் இக்கோழிக்கு உருவம் செதுக்கப்பெற்றுள்ளது (கருக்கிய - செதுக்கப்பட்ட).
கோழி உருவத்திற்கு மேல், தமிழ் மொழி வட்டெழுத்தில் இரண்டு வரிகளிலும், கீழ்ப்பகுதியில் ஒரு வரியும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் , "முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி" என மூன்று வரிகளாக கல்வெட்டு பிரித்து குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள். போரில் இறந்த வீரர்களுக்கு மட்டுமின்றி, நாய், கோழி ஆகிய உயிரினங்களுக்கும் நடுகல் எடுத்துள்ள தொன்மைச் சிறப்பினை இதன்மூலம் அறியமுடிகிறது.தற்போது இக்கல்வெட்டு விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மூன்று கோழி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1) இந்தளூர் கோழி நடுகல் (செங்கல்பட்டு மாவட்டம்)
2)அரசலாபுரம் கோழி நடுகல் (விழுப்புரம் மாவட்டம்)
3)ஆவியூர் கோழி நடுகல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
இவன்
கா.கோபாலகிருஷ்ணன்.MA,B,ed, M,phil
பட்டதாரி ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
பேரணி
திண்டிவனம் தாலுகா
விழுப்புரம் மாவட்டம்
Source
1) Facebook.com
2) அப்புறம் விழுப்புரம் YouTube channel
3)தினமலர் ஜன 31,2017
0 கருத்துகள்