நடுகல் எனும் நன்றி மறவாப் பண்பாடு
பகுதி -2
பகுதி -2
கற்பின் கதை சொல்லும் 15ஆம் நூற்றாண்டு நடுக்கல்
தமிழ் குடும்ப பெண்கள் கற்பை தமது உயிரினும் மேலாக போற்றினர்.என்பதற்கு நம்மிடையே பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதில் ஒரு சான்றாக பழனி அய்யம்புள்ளி குளக்கரையில் புதைந்த நிலையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டு நடுக்கல் ஒன்று கிடைத்துள்ளது.சிதைந்து போன கோயிலை இப்பகுதி மக்கள் "குடும்பன் கோயில்" என்றும் சிற்பத்தை குடும்பன் குடும்பச்சி என்றும் அழைக்கின்றனர்.
இச்சிற்பம் ஒரு நடுக்கல் ஆகும் .நினைவு கல் வகையைச் சேர்ந்தது.90×60 அளவுள்ள ஒழுக்கற்ற பலகைகல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் வலது புறம் உள்ள ஆண் ஒரு நீராணிக்கை ஆவார்.நீராணிக்கை என்பவர் வயல்களில் நீர் பாச்ச மடைதிருப்பும் வேலையைச் செய்யும் மடைக்குடும்பர்.குளத்தில் உள்ள குமிழித்தூம்பில் இருந்து பாசனைத் தேவைக்கேற்ப நீரை கலுங்கு வழியாக திருப்பி விடுபவர். இவருடைய வலது கையில் உள்ள தண்டு நீர்க்கண்டியாகும். நீர்நிலையில் உள்ள நீரின் அளவை பரிசோதிக்க பயன்படும் ஒரு குச்சி இக்குச்சியின் மேல் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் கத்தியை தன இடது கையில் குடும்பன் பிடித்துள்ளார். நீராணிக்கைகள் அணியும் பதக்கத்தை மார்பில் அணிந்துள்ளார். நெஞ்சில் சன்ன வீரமும் இடையில் எளிமையாக துணடும் அணிந்துள்ளார்.இடது புறம் உள்ள பெண் சிற்பத்தின் முகமும் வலது கையும் சிதைக்கப்பட்டுள்ளது.இவர்
மடைக்குடும்பிச்சி ஆவார். வயல்களில் வேலை பார்ப்பதற்கு வசதியாக முழங்காலுக்கு மேலாக ஆடை அணிந்த நிலையில் இடது கை "கட்டிய வலம்பித" முத்திரையுடனும் கால்களில் தண்டை கழுத்தில் கண்டிகை சரப்பள்ளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார்.
தற்போது இங்குள்ள மடைக்குடும்பர்கள் இக்கோயிலை பற்றியும் இச்சிற்பத்தையும் மனநெகிழ வைக்கும் ஒரு கதையை சொல்கிறார்கள். இந்த மடைக்குடும்பரும் குடும்பிச் சியும் கிபி 15 ஆம் நூற்றாண்டளவில் அய்யம் புள்ளி குளத்தைச் சார்ந்த வயல்களில் பருவம் பார்க்கும் நீர் மேலாண்மை வேலையைச் செய்து வந்துள்ளார்கள். அப்போது ஒரு சமயம் இக்குளத்தில் இருந்த குமிழித்தூம்பு உடைந்து போனதால் அதை சீர் செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதை பார்வையிட வந்த அரசர் குடும்பிச்சியின் பேரழகில் மயங்கி அப்பெண்ணை அடைய விரும்பினார். ஆனால் பேரழகும் கற்பும் ஒருங்கே அமையப்பெற்ற அப்பெண் அரசரின் ஆசைக்கு இணங்க மறுத்து விட்டார். அரசர் அவரை அடைய மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன.கணவரின் மேல் அளவற்ற காதலும் மதிப்பும் வைத்திருந்த குடும்பிச்சி தனது கற்பை எதற்காகவும் இழக்க விரும்பவில்லை. இதனால் கோபம் அடைந்த அரசர் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அவருடைய கணவரைக் கொன்று விடுவதாக மிரட்டினார்.அதற்கும் அப்பென் அசரவில்லை.
ஆத்திரமடைந்த அரசர் தனது ஆட்களை அனுப்பி இரவில் வயலில் நீர்பாய்ச்சி கொண்டிருந்த மடக்குடும்பரை கொன்று மடையில் உடலை செருகி வைத்து விட்டு பின் குடும்பகச்சியை
தூக்கி வர ஆணையிட்டார்.அதன்படி குடும்பர் குமிழித்தூம்பு அருகே வைத்து கொலை செய்யப்பட்டார்.உடல் மடையில் செருக்கப்பட்டது. கணவர் கொலையுண்டதை எவ்வாறோ அறிந்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பெண் ஆற்றாமையால் அழுது புலம்பி வேறு வழி இன்றி தன் கற்பைக் காப்பாற்ற இரவோடு இரவாக தலைமறைவானார் .பின் அரசப் படை அவரை தேடிப் புறப்பட்டு அங்கிருந்து நீங்கியதும் காலையில் குளத்தின் மடைக்குத் திரும்பிய குடும்பச்சி தன் கணவரை செருகி வைத்த அதே மடையில் தன் தலையைத் தானே செருகி கணவரைக் கட்டிப்பிடித்தபடி உயிர்தாதியாகம் செய்தார்.அப்பகுதி மக்கள் அநியாயமாய் உயிர் இழந்த அந்த தம்பதியின் நினைவாக அதே அய்யம்புள்ளி குளக்கரையில் ஒரு கோயில் எழுப்பி அவர்களை சிலை வடித்து வழிபடத் தொடங்கினர்.
கதை இதோடு முடியவில்லை. விசயம் கேள்விப்பட்ட அரசர் தன் முறையற்ற ஆசை நிறைவேறாத ஏமாற்றத்தில் இருந்தால் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்றார் கோயிலை இடித்துதள்ளி,தன்னை உறங்க விடாமல் செய்த அப்பேரழகுப் பெண்ணின் சிலை முகத்தை சிதைக்கவும் ஆனையிட்டார்.அவ்வாறே கோயில் இடிக்கப்பட்டு சிற்பமும் சிதைக்கப்பட்டு குளக்கரையில் புதைக்கப்பட்டது. செவி வழியாக சொல்லப்பட்டு வரும் இந்த உண்மை கதை தமிழ்க்குடும்பப் பெண்கள் உயிரினும் மேலாக கற்பைப் போற்றி வாழ்ந்த மரபைத் தெரிவிக்கிறது.
கண்ணகிக்கு காவியம் படைத்த ஒரு இளங்கோவடிகள் இருந்தைப் போல இந்தக் கற்புக்கரசிக்கு காவியம் படைக்க ஒரு புலவன் இல்லாததால் சிதைந்து போன சிலையாகவும் இடிந்து போன கோயிலாகவும் கற்பின் மேன்மையைப் பறைசாற்றும் இந்த நடந்த கதை செவி வழியாக மட்டுமே தொடர்கிறது.
(இந்த நடுகல்லை ஆய்வு செய்தவர்கள் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆணையர் (ஓய்வு)மா.கிருஷ்ணசாமி, தொல்லியல் ஆய்வாளர், தென் பொதிகை குடும்பம்,இராவணன், பொன்னையா (தென்காசி தொல்லியல் கழகம்) சக்திவேல் பாண்டியன் (இயக்குனர் பாண்டியர் நாடு வரலாற்று ஆய்வுத் தளம்), சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் (ஆயக்குடி))
தொடரும்.........
இவன்
கா.கோபாலகிருஷ்ணன்.MA,B,ed, M,phil
பட்டதாரி ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
பேரணி
திண்டிவனம் தாலுகா
விழுப்புரம் மாவட்டம்
Source
1)Facebook.com
2) பாண்டியர் நாடு YouTube channel
3) தினமணி News Paper
0 கருத்துகள்