Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " நுண்மாண் நுழைபுலம் "

 தமிழ் அறிவோம்!


" நுண்மாண் நுழைபுலம் " 




தங்களைப்   படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாட்டில் பலருண்டு. அளவின்றிப் படித்தால் மட்டும் போதாது. ஆழமாகப் படிக்கவேண்டும். " அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் " என்ற பழமொழியைப் படித்திருப்போம். நுட்பமாக ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்கள் நூல்பல கற்று என்ன பயன்? 


" நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 

மண்மாண் புனைபாவை அற்று. " 

( குறள் - 407)  


" நுட்பமானதாய் , மாட்சிமையுடையதாய்,  ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய அழகான தோற்றம், மண் பொம்மையின் அழகான தோற்றம் போன்றதாகும் " என்கிறார் வள்ளுவர்.  


தமிழில் எவ்வளவோ உவமைநயம் மிக்க பாடல்கள் உள்ளன.  அவையெல்லாம் தமிழ்ப்புலவர்கள் தமிழுக்குக் கொடுத்த கொடையாகும். தமிழர் அல்லாத ஒருவர் தமிழை முழுமையாகக் கற்று,  தமிழ் கவிநயத்தை  நுட்பமாக ஆராய்ந்து அழகாக உவமை அமைத்து பாடியுள்ள  பாடல் ஒன்றை இங்குக் காண்போம். 


"படித்த நூல்அவை பயன்பட விரித்துஉரைப் பவர்போல

தடித்த நீன்முகில் தவழ்தலை 

பொலிந்தபொன் மலையே 

குடித்த நீர்எலாம்  கொப்பளித்து அமுதுஎன அருவி 

இடித்து அறாஒலி எழத்திரை  எறிந்துஉருண்டு இரிவ " 


( வீரமாமுனிவர் , தேம்பாவணி - நாட்டுப்படலம் - 04 )


தாம் படித்த நூலைப் பிறருக்குப் பயன்படுமாறு சபைகளில், கல்விக் கூடங்களில் விரித்துரைப்பவர் போல் , நீரால் தடித்த கரிய மேகம் சிகரத்தோடு பொலிந்த அழகிய மலையும் தான் மழையால்   முன் குடித்த நீரை எல்லாம்  கொப்பளிக்கும். அந்நீர் அமுதம் போன்ற அருவியாக மலைமீது  இடித்து பாய்ந்து நீங்காத ஒலி எழுமாறு அலை அடிக்க ஆறாக மண்வாசத்தோடு உருண்டு ஓடும். 


கார்முகில் கனமழை பொழிவதைக் காட்சிப்படுத்துகின்ற  எத்தனையோ பாடல்களை  இலக்கியங்களில் நாம் கண்டிருக்கிறோம். கற்றவர்கள் தாங்கள் கற்றதையெல்லாம், கற்றோர் அவையில் விரித்துரைப்பதைப் போல கார்மேகமும் தான் குடித்த நீரைக் கொப்பளித்து ஆறாக  ஓடவைத்ததாக வீரமாமுனிவர் சொல்லும்  புதியதோர் உவமையைக் கண்டு உள்ளம் வியக்கிறது. இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் சமயப்பணியாற்றவே தமிழகம் வந்தார். தமிழின்பால் ஈடுபாடு கொண்டு தன் வாழ்வின் இறுதிவரை தமிழ்ப்பணியாற்றினார். நுனிபுல்லை மேய்வதைப்போல அவர் தமிழ் படித்திருந்தால் இப்படி ஒரு பாடலை அவர் படைத்திருக்க முடியுமா? முடியாது. நுட்பமாக ஆராய்ந்து  படித்ததால்தான் இப்படி ஒரு அழகான பாடலை அவரால் படைக்க முடிந்தது. 


நுட்பமாக ஆராய்ந்து தமிழைக் கற்ற வீரமாமுனிவர் தமிழரா? தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துவிட்டு, தாய்மொழியாம் தமிழ்மொழியை  ஏதோ எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்கள்   தமிழரா? சிந்தித்துப் பாருங்கள்.  நுட்பமாக ஆராயும் அறிவு  இல்லாதவர்களை மண்பொம்மை என்கிறார் வள்ளுவர்.  தமிழை நுட்பமாக ஆராய்ந்து படிக்காமல் , ஏனோ தானோ என்று படிப்பவர்கள்  தோற்றத்தாலும், பிறப்பாலும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் எல்லோரும் மண்பொம்மைகளே .


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்