Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " எம்மை அறிந்திலிர் "

 தமிழ் அறிவோம்!


" எம்மை அறிந்திலிர் "



ர் ஊரில் தற்பெருமைக்காரன் ஒருவன் இருந்தான். " இந்த உலகில் தனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாமே எனக்குத் தெரியும் " என்று தனக்குத் தானே  தம்பட்டம் அடித்துக் கொள்வான். ஒருமுறை அந்த ஊருக்கு வெளியூரில் இருந்து துறவி ஒருவர் வந்தார் .அந்த ஊரில் இருந்த மாணவர்களுக்குக் கல்வியும் , அறவொழுக்கமும்  கற்பித்தார்.  அந்தத் துறவியிடம் மாணவனாய் சேர விரும்பினான் தற்பெருமைக்காரன். 


" துறவியே!  நான் உங்களிடம் மாணவனாகச் சேர விரும்புகிறேன். எனக்குத் தெரியாதது  ஒன்றும் இல்லை. இந்த உலகில் நடக்கும்  அனைத்துமே எனக்குத் தெரியும். இந்த ஊரில் உள்ள மாணவர்கள் எல்லோருமே உங்களிடம் கல்வி கற்க வந்துள்ளதால் நானும்  உங்களிடம் கல்வி கற்க வந்துள்ளேன் " என்று செருக்குடன் கூறினான் தற்பெருமைக்காரன். 


அதற்கு அந்தத் துறவி,  " உனக்கெல்லாம் கல்வி கற்றுத் தர முடியாது " என்றார்.  " ஏன் என்று கேட்டான்? " தற்பெருமைக்காரன். " தண்ணீர் இல்லாத வெற்றுக்குடத்தில்தான் நீர் ஊற்ற முடியும். நீர் நிரம்பி வழியும் குடத்தில் எப்படி நீர் ஊற்ற முடியும்? அதைப்போல எல்லாம் தெரிந்த உனக்குக் கற்றுத்தர என்ன இருக்கிறது?  என்று  கேட்டார் துறவி. இதைக் கேட்டதும் தற்பெருமைக்காரனின் செருக்கு அடங்கியது. " துறவியே! உங்கள் அறிவுரையைக் கேட்ட அடுத்த நொடியே நான் ஒரு வெற்றுக்குடம் என்பதை உணர்ந்து கொண்டேன்.  யாம்செய்த பிழையைப் பொறுத்துக்கொண்டு என்னை நிறைகுடமாக மாற்றுங்கள் " என்று வேண்டினான் தற்பெருமைக்காரன் .நாம் அறிவுடைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடாது. நாம் அறிவுடையவர் என்பதைக் கற்றறிந்த சான்றோர்தான் சொல்ல வேண்டும். அதுவே நமக்குப் பெருமையாகும்.  


" எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று 

தம்மைத்தாம் கொள்வது கோளன்று - தம்மை 

அரியரா நோக்கி அறனறியும் சான்றோர் 

பெரியராக் கொள்வது கோள் ." 


( நாலடியார் - 165)


" எம்மை நீங்கள் அறிய மாட்டீர் " எம்போல் சிறந்த அறிஞர் இல்லை " . " எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை. " என்று தம்மைத் தாமே மதிப்பிட்டுக் கொள்வது நல்ல கோட்பாடு அன்று. தன்னைத் தானே உயர்வாக எண்ணுவதும் பெருமை ஆகாது. அறம் அறிந்த சான்றோர் உம்மைப் பெரியோர் என மதிக்குமாறு நடந்து கொள்ளவேண்டும்.  இதுவே சரியான கோட்பாடு ஆகும்.  


" தற்பெருமை

நம்மை துயத்தில் வைக்கும்!

தன்னடக்கம் 

நம்மை உயரத்தில் வைக்கும்! 


Source -தமிழ்மொழி


இவண் 

ஆ.தி.பகலன், 

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்