Ad Code

Ticker

6/recent/ticker-posts

தஞ்சாவூர் சுற்றுலா

தஞ்சாவூர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையாக திகழ்கிறது. வெளிமாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வந்து செல்லும் சுற்றுலா தளமாக தஞ்சாவூர் திகழ்கிறது. கண்ணைக் கவரும் தஞ்சை பெரிய கோவில் எழில்மிகு தஞ்சை அரண்மனை அறிவை வளர்க்கும் சரஸ்வதி மகாலில் உள்ள நூலகம் என சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா தலங்கள் தஞ்சாவூரில் காணப்படுகின்றன.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் :

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்.. பெரிய கோயில் அளவுகோல் எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர்.சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.சுமார் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு:

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு:

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின. அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது. மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது


  தஞ்சாவூர் அரண்மனை:

மன்னர்களின் காலம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்ப்பதில், நம் அனைவருக்குமே அலாதி ப்ரியம்தான். மன்னர்கள் அரசாண்ட அரண்மனைகளை, திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். அவை பெரும்பாலும் கற்பனையில் உருவாக்கப்பட்ட செட்களாகவே இருக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசர்கள் ராஜ்ஜியம் செய்த உண்மையான அரண்மனைகள் நேரில் காணக் கிடைப்பது பெரும்பாக்கியம்! தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பழைய பேருந்துநிலையத்திலிருந்து கீழராஜவீதிக்கு அப்படியே காலாற நடந்து சென்றாலே, தஞ்சாவூர் பழங்கால அரண்மனைக்குச் சென்றுவிடலாம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, அவர்களுக்குப் பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. பல நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாகக் காட்சியளிக்கிறது. மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என இன்னும் ஏராளம் உள்ளன.
அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்! இந்த அரண்மனை, தர்பார் மண்டபம், மணிமண்டபம், ஆயுதச் சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என நான்கு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்கு புறச் சுவர்களின் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதை `தொள்ளக்காது மண்டபம்' எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தஞ்சையைத் தலைமையாகக்கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம், தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள், தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுதச் சேமிப்பு மாளிகை, கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக்கொண்டவை. நீதிமன்றக் கட்டடத்தை, `ஜார்ஜவா மாளிகை', `சதர் மாளிகை' என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள். இது ஏழு மாடிகள்கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளன.
இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவா நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அரண்மனை, கி.பி.1674-லிருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில்நுட்பங்கள் பல, தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

  தஞ்சை ஓவியங்கள்: 

 ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள் என்ற ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இத்தஞ்சை ஓவியத்தினை குலதொழிலாக கொண்டனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் கலைகளின் மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்பதால் இவர்களுக்கு வேண்டுமளவிற்கு வாய்ப்புக்களை வழங்கி ஆதரித்து வந்தார். கி.பி. 16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள், ஆகியோர் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். இதனால் தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன. மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது

சரஸ்வதி மகால் நூலகம்:

சரஸ்வதி மஹால் நூலகம் சோழர்கள் காலத்தில், சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும், இந்த நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் அழைக்கப்பட்டதாக கி.பி. 1122 இருந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 700 சுவடிகள்தான் இருந்துள்ளன. இப்போது, பல்வேறு இடங்களில் சேகரிப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட நுால்கள் என 70 ஆயிரம் நுால்கள் உள்ளன. அத்துடன், 50 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாண அரசு 1918ல் அரசாணை 1306ல், சரஸ்வதி மஹால் நுாலகத்தை அரசுடமையாக அறிவித்தது. சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675-ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்நூலகத்தை பேணிப்போற்றி வளா்த்தனா். மராத்திய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). இம்மன்னரின் சேவையை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.
இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30,433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6,426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும். நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது. இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு,சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு,ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும்,கையெழுத்துப்பிரதிகளும்,அச்சுப்பிரதிகளும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 25,000 சமஸ்கிருத நூல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 400ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட'நந்திநாகரி' என்னும் எழுத்து வடிவத்தில் உள்ள சுவடிகளும் இங்கு உள்ளன. கி.பி. 1703-ல் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 'சீவகசிந்தாமணி' நூல் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட'சாமுத்திரிகா' என்ற அரியநூல் ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது . சரஸ்வதி மஹால் நூலகமும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. மன்னர்கால மருத்துவ முறைகள், கட்டடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மிகவும் பழைமையான நூல்கள் மட்டுமல்லாமல், ஏராளமான ஓலைச்சுவடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.

                                     தஞ்சை  பெரிய கோவில்

சரஸ்வதி மஹால்

தஞ்சை அரண்மனை 

 



கருத்துரையிடுக

0 கருத்துகள்