Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் "

 


"தேமதுரத் தமிழோசை  " என்றால் என்ன? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது ஈழத்தமிழர் பேசுகின்ற தமிழ்தான்  " தேமதுரத் தமிழ் " ஆகும்  . அயல்மொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுவார்கள். அதைக் கேட்க கேட்க அழகுதான். அதுபோல,  தமிழர்கள் என்றாலே அது ஈழத்தமிழர்களையே குறிக்கும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம்  உண்மையானத் தமிழர்கள் இல்லை. தமிழ்மொழி பேசத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான். 


ஈழத்தமிழர்கள் எல்லாம் தமிழ்  இனத்தைக் காக்க இன்னுயிர் ஈந்தவர்கள். ஈழத்தமிழர்கள்  புலிக்கு ஒப்பானவர்கள் ." புலி பசித்தாலும் தன் பிள்ளையைத் தின்னாது " என்பதற்கேற்ப தன் இனம் வாழ தன்னுயிரைக் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஈழத் தமிழர்களால்தான் இன்று உலகெங்கும் தமிழ்மொழி  பரவி  உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. 


தமிழகத்தில் உள்ள தமிழர்கள் பூனைக்கு ஒப்பானவர்கள். தன் குட்டியைத் தானே உண்ணும் பூனையைப் போல தன் இனத்தைத் தானே அழிப்பதில் கைதேர்ந்தவர்கள். யாராவது அடுக்குமொழியில் பேசினால் அவர்களுக்கு அடிமையாகி விடுவார்கள். கேட்டால் தமிழ்ப்பற்று என்பார்கள். ஆனால்  பிறமொழியில்தான் பெயர் வைப்பான். ஆங்கில வழியில்தான் தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பான். மேடையில் பேசுவதிலும், கேட்பதிலும்தான் இவர்களின் தமிழ்ப்பற்று இருக்கும். செயலில் இவர்களின்  தமிழ்ப்பற்று செயலிழந்து போய் இருக்கும். 


இன்று தமிழகத் தமிழர்களை  முழுவதுமாக  ஆங்கில வழிக் கல்வி ஆட்கொண்டுவிட்டது. அன்று ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்தார்கள்.  இன்று ஆங்கில மொழிக்கு அடிமையாக இருக்கிறார்கள். அடிமைப்பட்டுக் கிடப்பதில் அப்படி ஒரு பேரின்பத்தைக் காண்கிறார்கள். தமிழர்கள் நிலை வரும் காலத்தில் எப்படி  இருக்கப் போகிறது என்பதை அன்றே கணித்தான் பாரதி. அதை தன் பாடலில் அழகாகப் பாடினான். 


" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 

 இனிதாவது  எங்கும் காணோம் ; 

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் 

இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு , 

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்? 

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 

பரவும்வகை செய்தல் வேண்டும் " 


என்று பாடினான் பாரதி.  தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவ நாம் செய்ய வேண்டியனவற்றையும் பாரதி பாடல்வழி அறிவோம்.


" பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.

இறவாத புகழுடைய புதுநூல்கள் 

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் 

சொல்வதிலோர் மகிமை இல்லை. 

திறமான புலமையெனில் வெளிநாட்டார் 

அதைவணக்கம் செய்தல் வேண்டும் " 


என்று பாரதி சொன்னவற்றில் ஒன்றையாவது உருப்படியாக செய்தோமா? இல்லையே. பிறகெப்படி தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும். 

இனியாவது அதற்கான வழிகளைப் பின்பற்றுவோம். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்களாகிய நாம் வாழ முடியும். தமிழ்மொழி தழைத்தோங்கக் கீழ்க்கண்ட பத்துக் கட்டளைகளையும்  தமிழர்கள் அனைவரும்  இனி பின்பற்ற வேண்டும்.


1.தமிழர்கள் என்றால் அவர்கள் தமிழில்தான் பெயர் சூட்ட வேண்டும். தமிழ் என்ற முன்னொட்டைக் கொண்டு பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும். சான்றாக,  தமிழ் மாறன் , தமிழ்ச் செல்வன்,  தமிழரசு,  தமிழ் அழகி, தமிழ்ச் செல்வி, தமிழ் நிலா.  இவ்வாறு பெயர் சூட்டித் தமிழை  நாள்தோறும் நம் நாவால் உச்சரிப்போம். 

2.அம்மா, அப்பா பெயர்களின் தலைப்பெழுத்துடன்  நம் பெயரை தமிழில் கையொப்பம் இடுவோம். சான்றாக பெற்றோர் பெயர் கயல்விழி - விழியன். குழந்தைப் பெயர் தமிழ்மாறன் எனில் க.வி.தமிழ்மாறன் என்று கையொப்பம் இடவேண்டும். 

3.அலைப்பேசியிலோ , மேடையிலோ, ஒருவரைச் சந்திக்கும் போதோ " வாழ்க தமிழ் " என்று வாழ்த்திவிட்டு பேசத் தொடங்குங்கள். 

4.அயல்மொழிச்சொல்  கலப்பின்றித் தனித்தமிழில் பேசுங்கள். மற்றவர்களையும் பேச வையுங்கள்.

5.ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது, தமிழ் இலக்கியங்களை வாசியுங்கள் .

6.எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தமிழர்களின் அடையாளமாக உள்ள வேட்டி( ஆண்கள்) ,  சேலை ( பெண்கள்) களை உடுத்துங்கள். 

7.வாழ்க்கையில் 10 பேருக்காவது தமிழைப்  பிழையின்றி எழுதப் பேச கற்றுக்கொடுங்கள். அவர்களைத் தமிழ்ப் பற்றாளர்களாக மாற்றுங்கள்.  அவர்கள் அயல்மொழி பேசுவோராக இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். 

8.உங்கள் ஆண்டு வருவாயில் 10 விழுக்காட்டுத் தொகையில் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை வாங்குங்கள். அதில் பாதியளவு நூல்களை நீங்கள் படிப்பதற்குப் பயன்படுத்துங்கள். மீதி நூல்களை நூல்கள் வாங்க இயலாத தமிழ் ஆர்வலர்களுக்கு நன்கொடையாகத் தாருங்கள். இதனால் தமிழ்ப் படைப்பாளிகளும் பயன்பெறுவார்கள். தமிழைப் படிப்போரும் பயன்பெறுவார்கள். 

9.தமிழர்களுக்கென்று சாதி, சமயம்  எதுவும் இல்லை. தன் சாதி, சமயத்தைக் களைந்து " தமிழன் " என்ற  அடையாளத்தை மட்டும் கொள்பவர்களே உண்மையானத் தமிழர்கள்.

10.வள்ளுவர் வாக்கையே தம் வாழ்க்கையாகக் கொண்டு வாழ்பவர்களே உண்மையானத் தமிழர்கள். வள்ளுவத்தின் வழியில்தான் தமிழர்கள் வாழ வேண்டும். திருக்குறள் எப்படி தமிழ்மறையாக இருந்தாலும், அது பொதுமறையாகப் போற்றப்படுகிறதோ அதுபோலவே, தமிழர்களும் உலக மக்களால் " பொது நிலையினர்"  என்று போற்றப்பட வேண்டும்.  


இந்தப் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் தமிழும் வாழும். தமிழனும் வாழ்வான்.


இன்று தமிழ்மொழியை உலகெங்கும் பத்துக்கோடி மக்கள் பேசுகின்றனர். 154 நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. உலகில் மிகுதியான மக்களால்  பேசப்படும் மொழிகளின்  தரவரிசைப் பட்டியலில் தமிழ்மொழி 15 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை,   சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, பிஜித் தீவுகள்,  மொரிசியசு , தென் அமெரிக்கா ,கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இலங்கையில் 95 விழுக்காட்டினர் தமிழிலேயே கல்வி  கற்கின்றனர் . இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள பணத்தாளிலும், நாணயத்திலும் தமிழ் இடம்பெற்றுள்ளது. மொரிசியசு நாட்டுப் பண்த்தாளில் தமிழ் எண்களில் பணத்தின் மதிப்புக் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டு கடவுச்சீட்டில் தமிழ் இடம்பெற்றுள்ளது.  


,சிங்கப்பூர், மொரிசியசு ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவராகத்    தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். பிரெஞ்சுக் கயானா நாட்டின் முதன்மை அமைச்சராக ( பிரதமர்)  தமிழர் ஒருவர் இருந்திருக்கிறார். இவ்வளவு சிறப்புகளைத் தமிழும் தமிழர்களும் அடைந்திருக்கிறார்கள்.  மேலும் அது பன்மடங்கு விரிவடைய நாம் தொடர்ந்து  தமிழ்ப்பணி ஆற்றுவேண்டும்.


" தமிழா!

தமிழ் மீது பற்று வை.

உன் தமிழ்ப்பற்றை 

உலகெங்கும் பற்ற வை!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்