Ad Code

Ticker

6/recent/ticker-posts

diwali history in tamil|தமிழ் வரலாற்றில் தீபாவளி|history of diwali in tamil



இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது.

இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது.

இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.

தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.
அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது.



பொதுவாக தீபாவளி ஐப்பசி மாதங்களில் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் இந்த மாதத்தில் மாற்றம் நடப்பது உண்டு. ஐப்பசி இல்லை என்றால் புரட்டாசி. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய நூல் யட்ஷ் ராத்திரி என்று தீபாவளி பண்டிகையை குறிப்பிடுகிறது. இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்.விஷ்ணுபுராணம் தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜையை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லட்சுமி கடாட்சம் கைவர கிடைக்கும் என்கிறது.

இன்னொரு கதையும் உண்டு. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீப வழிபாடு தீபாவளி என நாம் கொள்ளலாம். மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.

புராணங்கள் இப்படிச் சொல்ல, தீபாவளிப் பண்டிகை எப்போதிருந்து கடைப்பிடிக்கப்பட்டது? ஏன் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி வேறு சில விளக்கங்களும் சொல்லப்படுகின்றன.

கி.பி.ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கி.பி. 1117ல் வாழ்ந்த சாளுக்கிய திரும்புவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்பது கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கருத்து.

 பண்டித அயோத்திதாஸர் தீபாவளி பண்டிகை பௌத்தப் பண்டிகை; அதனை பிராமணர்கள் திருடிக் கொண்டார்கள் என்கிறார். தீபாவளிப் பண்டிகை குறித்து கட்டுரை ஒன்றை 1907ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி எழுதியிருக்கிறார் அயோத்திதாஸர். தீபாவளி பண்டிகை என்னும் தீபவதி ஸ்னான விவரம் என்ற அந்தக் கட்டுரையில், தீபாவளிப் பண்டிகையை ஒரு பவுத்தப் பண்டிகை என குறிப்பிடுகிறார் அயோத்திதாஸர்.

"வருடந்தோறும் சகல குடிகளும் எள்ளின் நெய்யாற் பலகாரம் செய்து தீபவதி நதியில் தலைமுழுகி புதுவஸ்திரம் அணிந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து நல்லெண்ணெய் கண்டுபிடித்த அற்பிசி மாதச் சதுர்த்தசி நாளை தீபவதி ஸ்னான நாளென வழங்கிவந்தார்கள்.

 

இத்தகைய வழக்கமானது புத்ததன்மம் இத்தேசமெங்கும் பரவியிருந்த காலத்தில் கனவான்கள் முதல் ஏழைகள் வரையில் இப்பண்டை யீகையை ஆனந்தமாகக் கொண்டாடிவந்தார்கள். அதன்பின் பராயசாதியோர் வந்து குடியேறி புத்ததன்மத்தை நிலைகுலையச் செய்து மதுக்கடைகளைப் பரவச்செய்தக்கால் பொய்க் குருக்களை அடுத்த குடிகள் கல்வியற்றவர்களும் விசாரிணை அற்றவர்களும் ஆதலின் தங்கள் குருக்களை நாடி தீபவதி - தீபவெளி - தீபாவளி எனும் வாக்கியபேதம் அறியாமல் சுவாமி இப்பண்டிகையின் விவரம் என்ன என்று உசாவுங்கால் குருக்களே பிராமணர்கள் எனும் புதுவேசம் இட்டு பிச்சை ஏற்பவர்களாதலின் அவர்களுக்கு இதன் அந்தரங்கம் தெரியாமல் மலையை ஒத்த ஓர் அசுரன் இருந்துகொண்டு மாட்டையொத்த தேவர்களுக்கு இடுக்கங்கள் செய்தபடியால் அவ்வசுரனை ஒரு தேவன் கொன்று தேவர்களுக்கு சுகஞ்செய்த நாளாகையால் நீங்கள் தலைமுழுகி புது வஸ்திரமணிந்து பலகாரம் சுட்டுத்தின்பதென்னும் கட்டுக்கதையை ஏற்படுத்திவிட்டதுமல்லாமல் அதன் மத்தியில் தங்கள் வயிற்றுச் சீவனவழியையும் தேடிக்கொண்டார்கள்" என்கிறார் அயோத்திதாசர்.

ஆனால், மயிலை சீனி. வேங்கடசாமி, சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகைதான் தீபாவளி என்கிறார். சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் அரசனின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்திருந்தார்.

பொழுதுவிடிந்ததும் விழித்துப் பார்த்த மக்கள் மகாவீரர் வீடுபேறடைந்திருந்ததை உணர்ந்தனர். தகவல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அரசன் மற்ற அரசர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு அந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழா கொண்டாடும்படி செய்தான். மகாவீரர் விடியற்காலையில் வீடு பேறு அடைந்ததால்தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது என்கிறார் சீனி. வேங்கடசாமி.

சமணர்களின் இந்தப் பண்டிகை எப்படி இந்து மதத்திற்குள் நுழைந்தது என்ற கேள்விக்கு ஒரு பதிலை முன்வைக்கிறார் வேங்கடசாமி. "சமண மதம் வீழ்ச்சியடைந்த பிறகு பெருவாரியான சமணர்கள் இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் தாங்கள் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்து கொண்டாடிவந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் தாமும் அதை ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையை கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும் அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானதன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டை கால இந்தியர்களின் போர் முறையும் அல்ல.

இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புதிதாக கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை" என்கிறார் சீனி. வேங்கடசாமி.



 தமிழ் வரலாற்றில் தீபாவளி

ஆனால், இவையெல்லாம் தீபாவளிக்கு பின்னணி குறித்த கதைகளே தவிர, அவை கொண்டாடப்பட்டது குறித்த ஆவணமல்ல. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தமிழில் தீபாவளி குறித்த பதிவுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

"தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. வீரமாமுனிவரின் சதுரகராதி 1732ல் வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. 1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. அதற்கு புராண விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தத் தருணத்தில் இந்த விழா அறிமுகமாகியிருக்கலாம்" என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.

தமிழ் மரபின்படி, நம்முடைய விழாக்கள் அனைத்துமே அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் கொண்டாடப்படுவது வழக்கம். 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த விழா பிரபலமாக இருந்ததாகச் சொல்ல முடியாது என்கிறார் பொ. வேல்சாமி. உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாற்று நூலான என் சரித்திரத்தில் தீபாவளி குறித்து ஏதும் பெரிதாகக் கிடையாது என்பதையும் பொ. வேல்சாமி சுட்டிக்காட்டுகிறார்.

தவிர, தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்து பயணக் குறிப்புகளையும் மக்களின் சமூக பழக்கவழக்கங்களையும் எழுதிய வெளிநாட்டவரின் குறிப்புகள் எதிலுமே தீபாவளி குறித்த பதிவுகள் கிடையாது என்கிறார் வேல்சாமி.

ஆனால், கார்த்திகை மாதத்தில் தீபம் அல்லது நெருப்பை ஏற்றி சடங்குகளைச் செய்யும் நிகழ்வுகள் இருந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் பொ. வேல்சாமி, அவற்றுக்கும் நாம் தற்போது கொண்டாடும் தீபாவளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.

 

பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவனும் பழந்தமிழ்நாட்டில் தீபாவளி என்ற பண்டிக்கை இல்லை என்கிறார். 'சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்' என்ற கட்டுரையில் இது குறித்துப் பேசும் தொ. பரமசிவன், "தமிழ்நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தை மாதம் முதல் ஆடி மாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்தில் உள்ள நிலப்பகுதியாகும். எனவே வேளாண் தொழில்சார்ந்த பணிகள் இல்லாத காலப்பகுதியே தமிழர்களின் திருவிழாக் காலமாகிறது. தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள் இந்தக் கால அளவில்தான் கொண்டாடப்படுகின்றன

இன்று பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி, விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழாவாகும். வடநாட்டில் இது சமணசமயத்தைச் சேர்ந்த திருவிழா ஆகிறது" என்கிறார் தொ. பரமசிவன்.

ஆனால், பெரும்பாலானவர்கள் ஒரு பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும்போது அது எங்கிருந்து வந்தது, அதனை நாம் கொண்டாடலாமா என்ற ஆராய்ச்சிக்குள் புகுவதைவிட்டுவிட்டு, விருப்பமிருந்தால் கொண்டாடுவதே சிறந்தது என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான ஆ. சிவசுப்பிரமணியம்.

"எல்லோரும் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடும்போது அதை விமர்ச்சித்து, வருத்தமேற்படுத்தி என்ன ஆகப் போகிறது. விருப்பமிருப்பவர்கள் கொண்டாடட்டும். விருப்பமில்லாதவர்கள் சும்மா இருக்கலாம்" என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியம்.

எல்லோரும் கொண்டாடிய தீபாவளி

தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூடக் கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.

பழங்கால இந்திய மன்னர்கள் இந்துக்களாக இருந்தாலும் முகலாயர்களாக இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பல சலுகைகளையும் பரிசுப் பொருட்களையும் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அரசனின் தர்பாருக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளுக்கு அடித்தளம் போட்டு தரும் நாளாக பண்டிகைகள் திகழ்ந்துள்ளன. முகாலய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன. இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், யானை தந்ததங்கள் எடுத்து சென்றதாக வரலாற்று கூறுகிறது. அந்த வணிக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். ஆகவே பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி.சீக்கியர்களும்,சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடகின்றனர். சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்