Ad Code

Ticker

6/recent/ticker-posts

எம்டன் கப்பல்


முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தை 'மதரசாப்பட்டினம்' என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனைச் சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர். இதனால் ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. ஜெர்மனியின் "எஸ்.எம்.எஸ். எம்டன்" என்ற நவீன போர்க்கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை நோக்கி வீரர்கள் வந்தனர். கேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த கப்பலில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த பொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம் பெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்தின் பிடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார்.
எஸ்எம்எஸ் எம்டன் போர்க்கப்பல் போலந்து நாட்டிலுள்ள டான்ஜிக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் ஜெர்மானிய கப்பல் வல்லுனர்களால் கட்டமைக்கப்பட்டது. இந்த கப்பல் பல்வேறு வியக்க வைக்கும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.1909ம் ஆண்டில் இந்த கப்பல் போர்ப் பணிக்காக முறைப்படி ஜெர்மனி கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பல் 388 அடி நீளம் கொண்டது. இந்த கப்பலில் இரண்டு ராட்சத நீராவி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தன.இந்த கப்பல் மணிக்கு 43.5 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்ததாக இருந்தது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,960 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த கப்பலில் 18 அதிகாரிகளும், 343 வீரர்களும் பணியாற்றினர். இந்த போர்க்கப்பலில் 20 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. முதலாம் உலகப்போரின்போது இந்த 20 பீரங்கிகளும் எந்நேரமும் தாக்குதல் நடத்தும் விதத்தில் தயார் நிலையில் இருந்தன. இந்த போர்க்கப்பல் அதிக காற்று வீச்சு மற்றும் அலைகள் நிறைந்த கடல் பகுதிகளிலும் மிக வேகமாக செல்லும் திறன் படைத்தது. இந்த கப்பலை பற்றி மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், ஒவ்வொரு நாட்டு கடற்பகுதியில் செல்லும்போது, அந்த நாட்டின் கொடியை கட்டிக் கொண்டு தந்திரமாக எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களை பெற்றிருக்கின்றனர். இந்த போர்க்கப்பல் முதலாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.
செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணி அளவில், சென்னையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் "எம்டன்" கப்பல் நிலைநிறுத்தப்பட்டது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் மின்சாரத்தை நிறுத்தி நகரையே இருளில் மூழ்கச் செய்தனர். ஆனால் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த கலங்கரை விளக்கம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தை மையமாக வைத்து, 'எம்டன்' கப்பலில் இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டுகள் வீசினர். இதில் சென்னை துறைமுகத்திலிருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறின. ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் உயர்நீதிமன்ற சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது. சேதத்தை ஏற்படுத்திவிட்டு 'எம்டன்' கப்பல் சென்னையைவிட்டு ஆழ்கடலுக்கு சென்றது. ஆங்கிலேயே கடற்படை பின்தொடர்ந்தும், 'எம்டன்' கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயப் படைக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த 'எம்டன்' கப்பல் 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ஆஸ்திரேலிய போர் கப்பலால் சிட்னி துறைமுகம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய பகுதியான உயர்நீதிமன்ற வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Reference
https://tamil.drivespark.com
https://www.dailythanthi.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்