சிலவகை செயல்கள் பழக்கமாகச் செய்யும்போது அதற்குப் பின் இருக்கும் மனப்பாங்கு ஒருநிலைபடுகிறது. அது நல்வழியில் செல்ல மனிதன் மனம் அறப்பண்பினை உடையதாகிறது. இப்பண்பினை தரவல்லது கல்வியே. "எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்" என்பதால் நல்லெண்ணங்களை மாணவர்களிடம் வளர்ப்பது கல்வியின் தலையாய நோக்கமாகிறது.சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத் தருவதும், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று அறக்கருத்துக்களை கற்பிப்பதும் தனிமனிதன், சமுதாயம் அனைத்தும் சிறப்புற வேண்டியே. இத்தகைய பண்புகளை வளர்ப்பது கல்வி நிலையங்களே. கல்வி மட்டுமே ஒருவனை முழுமையாக்குகிறது. கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அத்தகைய சிறப்புகளை வழங்கும் வள்ளலாய் இருப்பது கல்வி. அதை நல்குவது கல்வி நிலையம்.
கல்வியானது வாழ்வை இனிமையானதாக்கி உள்ளத்தில் எழும் வினாவிற்கு எல்லாம் அறிவானது விடை காண விழையும். சிந்தனையைத் தூண்டும் கற்பனைத் திறனை வளர்க்கும் கல்வி பெறுவோர் உயர் இலட்சிய கனவுகளை காணவும் அதனை நனவாக்கும் மன வலிமையும் பெறுவர். உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல் நல்வாழ்வுக்கு உயர்வளிக்க கல்வி அவசியம். கல்விக் கூடங்களால் கல்வி கற்கும் மாணவிகளிடம் மனிதநேயம், விட்டுக் கொடுத்தல்,ஈகை, பகிர்தல், நல்லொழுக்கம், தலைமையேற்கும்பங்கு, வழிகாட்டும் இயல்பு, பங்கேற்கும் தன்மை, கீழ்ப்படிதல், முன்னோர் சொல் மதிப்பு, நட்பு, குழு உணர்வு, நன்மை தீமை இனங்காணல், தன் திறமைகளை வெளிக்காட்டும் தன்மை, வாழ்தலின் எளிமை,எளிமை தரும் புகழ் என்ற அனைத்தும் மாணவர்களுக்கு உளமாற்றமாக ஏற்பட வாய்ப்பு அளிப்பது கல்வி. இக் கல்வியினை நம் சந்ததிகள் பெற்றிட வகை செய்வோம்.
1 கருத்துகள்
கல்வி என்னும் செல்வம், அள்ள அள்ள குறையாமல் அதிகரிக்கும்!
பதிலளிநீக்கு