Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஜி.டி. நாயுடு

தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு(ஜி.டி.நாயுடு) சுயமாக உருவான அறிவியல் கண்டுபிடிப்பு மேதை. உண்மையில் அவர் கோடியில் ஒருவர். சாதாரண நிலையிலிருந்து வாழ்க்கையில் முன்னேறிய அவரது வெற்றி. களைப்பில்லாத வேலை மற்றும் தெளிவான குறிக்கோள், அவரது நேர்மையால் அமைந்தது. வெறுமனே அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையில்லாதவர். வெற்றி என்பது திட்டமிட்ட மற்றும் கற்பனை சக்தியுடன் கடின உழைப்பினால் பெறப்படுவது என்பதை நம்பினார். அதிசய மனிதர் என்று அழைக்கப்படுகின்ற ஜி.டி. நாயுடு ஆவார். இன்று கோவை ஒரு தொழில் மாநகராகத் திகழ்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் ஜி.டி.நாயுடுதான். 1893-ல் கோவை அருகில் உள்ள கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த துரைசாமிதான் பின்னாளில் ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்பட்டார். இவரது தாயார் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் தமது தந்தையார் கோபாலசாமி நாயுடுவால் வளர்க்கப்பட்டார்.பிரபல தொழில் மேதை ஜி.டி.நாயுடு மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக விளங்கிய அவர்  ஆரம்பகாலத்தில் 12 ரூபாய் சம்பளத்திற்காக கோவையில் ஒரு ஓட்டலில் வேலை செய்திருக்கிறார். தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்திய ஜி.டி. நாயுடு தானாகவே தமிழ் கற்றார். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை முழுமையாக படித்தார். சமய பாடல்களை கற்றார். தத்துவம், வானவியல், மருத்துவம் போன்ற பல்துறை நூல்களையும் படித்தார்.விரைவில் நாயுடு கடன் வாங்கி பருத்து தொழில் செய்தார்.அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் துரதிருஷ்டங்களை சமாளித்து வெளிவரும் தைரியம் அவரிடமிருந்தது.தோல்வி என்பது வெற்றிக்கான படிகள் என்பதை எப்போதும் நம்பினார்.


ஜி.டி.நாயுடு மோட்டாரின் ரேடியேட்டருக்கு  பதிலாக ஓர் இயந்திரம் கண்டுபிடித்தார். அதை உபயோகித்தால் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.மேலும் பஸ் எஞ்சின்  ஓடும் போது அதனுடைய துடிப்பு அதிகமாக உள்ளதா? குறைவாக உள்ளதா? என்று அறிய 'வைப்ரேட்டர் டெஸ்டிங் மிஷின்'ஒன்றையும் கண்டுபிடித்தார்.ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தையும் இவர்தான் கண்டுபிடித்தார். ஜி.டி.நாயுடு நார்வே 'எக்"கினால் அங்குலத்தில் 200-இல் ஒரு பாகம் கன அளவு உடைய 200 முறை ஷேவ் செய்யக்கூடிய பிளேட்டை தயாரித்தார்.ஆனால் அதற்குரிய மூலப்பொருட்களை நார்வே தர மறுத்து விட்டதால் அவருடைய கண்டுபிடிப்பு பயன்படாமல் போய்விட்டது .ஜி.டி.நாயுடு தனது தொழிற்சாலையின் அனைத்து அறைகளுக்குமான ஒரே சாவியான மாஸ்டர் கீ ஒன்றை தானே தயாரித்து வைத்திருந்தார். அது 640 பூட்டுக்களை திறக்க வல்லது. ஜி.டி.நாயுடு சிறுவயதிலேயே எதனையும் ஆக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார். இவர் ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தினால் அதனை தாம் அடைந்து விடுதல் வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும். ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்திருந்தார். அதனை ஜிடி நாயுடு பார்த்த மாத்திரத்தில் வாங்கி விடுதல் வேண்டும் என்கிற பேராவல் கொண்டார். ஆனால் கையில் பணம் கிடையாது இதனால் பணம் சேர்த்துக் கொண்டே அதே மோட்டார் சைக்கிள் விலை கொடுத்து வாங்கினார். அதற்கான பணம் கிடைத்தது எப்படி என்பதனை ஆராய்ந்தோமானால் நமக்கு அது மலைப்பாக இருக்கும். அதாவது அவர் உடனே கோயம்புத்தூர் சென்று ஒரு ஓட்டலில் வேலை சேர்த்து அதில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு இந்த மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கின்றார்.பிறகு இந்த வண்டியின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் நல்ல முறையில் பகுதி பகுதியாக பிரித்து போட்டு அதன் தொழில்நுட்பத்தினை அறிந்துகொள்கிறார். பிற்பாடு ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு பருத்தி ஆலை ஒன்றில் வேலையில் சேருகிறார். இந்த ஆலையில் சேர்ந்த போது தான் இவருக்கு சுயமாக தொழில் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. தமது எண்ணம் ஈடேறுவதற்காக இவர் மிகவும் கடுமையாக உழைக்கலானார் தமது உழைப்பு ஒன்றையே நம்பி அதிக அளவினில்உழைக்கலானார்  சிறு துளியாக இவர் சேர்த்த பணம் பெருந்துளியாக மாறியது.

தம்மிடம் இருந்த பணத்தைக் கொண்டு பருத்தி ஆலை ஒன்றை தொடங்கினார்.இந்த தொழிலை மும்பை சென்று மேம்படுத்த விரும்பினார்.ஆனால் இவருடைய எண்ணம்  ஈடேறவில்லை. இதனால் மீண்டும் கோயமுத்தூர் வந்து வேறு தொழில்கள் செய்ய ஆயத்தமாகின்றார்.  பருத்தி ஆலைத் தொழிலை விட்டு விட்டு அப்போது கோயம்புத்தூரில் மோட்டார் வண்டிகள் கம்பெனி நடத்தி வந்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் வேலைக்கு செல்லலானார். ஆனால் அவரோ வேலை தராது மோட்டார் வண்டி ஒன்றினை வாங்கித் தந்து உதவினார். அவரிடம் வண்டியை பெற்ற ஜி.டி.நாயுடு அதனை பிரித்து பகுதி பகுதியாக ஆராய்ந்து வைக்கலானார்.அதன் தொழில் நுட்பங்கள் குறித்து பூரணமாக அறியலானார்.  பின்னர் அந்த வண்டியைத் தாமே ஓட்டி பெரும் பொருளினை சம்பாதிக்கலானார்.இதன் மூலம் பல மோட்டார் வண்டிகளை வாங்கி விற்பனை செய்கிற அளவுக்கு உயர்ந்தார்.நாளடைவில் மோட்டார் வண்டி தொழிற்சாலையையே அமைத்து பலருக்கு வேலை வாய்ப்புகள் அளித்து உதவி புரிந்தார்.பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழில் வளர்ச்சியும் தொழில்நுட்ப முறைகளையும் அறிந்து அவற்றை இங்கு பயன்படுத்தி வெற்றி கண்டார்.இவர்தம் கண்டுபிடிப்புகள் உலகில் பெரும் புகழினை இவருக்கு உண்டாக்கி தந்தது. சோதனைகள் பல வந்தாலும் அவற்றை சந்தித்து சோதனைகளை சாதனையாக்கி சரித்திரத்தில் தனியிடம் பெற்றவர் ஜி.டி.நாயுடு. ஒரு கண்டுபிடிப்பாளரின் திறமையை கொண்ட ஜி.டி.நாயுடு ஒரு மேதை.

தமிழ்நாட்டுக்கு பல பெருமைகளை தேடித் தந்தவர் இவர். ஜி.டி.நாயுடு உலக சாதனையாளர்களிலே மிகவும் முக்கியமான ஒருவராக விளங்கினார். ஒரு ஓட்டல் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி மோட்டார் வாகனத் துறையில் இறங்கி அதிலேயே ஆராய்ச்சிகள் செய்து சுமார் 80க்கும் மேற்பட்ட இயந்திரங்களை இவர் புதுமையாக தயாரித்தார். பத்து வருட காலத்தில் ஜி.டி. நாயுடு பல இயந்திரங்களை கண்டு பிடித்தார்.அவருடைய கண்டுபிடிப்புகளுள் சிறந்தது ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரம். பிளேடு செய்யும் இயந்திரமும், கேமராவுக்கு தேவையான டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர், புதிய அழகிய வானொலிப் பெட்டிகள், உயர்ரக கலர் கடிகாரங்கள், பேனா நிப்பு கள் ஆகியவை இவர் கண்டு பிடிப்புகளில் மேலும் சில.அவருடைய கண்டுபிடிப்பிற்கு சரியான விளம்பரம் கொடுக்கப்படவில்லை. தம் நாட்டின் விஞ்ஞான சஞ்சிகைகள் கூட அவரது கண்டுபிடிப்புகளை பற்றி எழுதாது  வேதனை. தேசிய வாழ்க்கையில் ஒரு தொழிலதிபர்,கண்டுபிடிப்பாளர்,கல்விமான் என்று பல பாத்திரம் ஏற்றவர். இளயவர்களை பயிற்றுவிக்க கல்வி முறையில் சொந்தமாக பல திட்டங்களை ஆரம்பித்தார்.அவருடைய குறுகியகால படிப்பு திட்டத்தால் பல இளைஞர்கள் பயனடைந்தனர். வெறும் ஏட்டுப் படிப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. தொழில் படிப்பு இணைந்த படிப்பு வேண்டும் என்றவர். தம்மைப் போன்றே  இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். என்பதற்காக அறிவியல் பயிற்சி கூடங்களை நிறுவினார்.  பொருட்காட்சி அரங்குகளையும் உருவாக்கினார். தன் விவசாய பண்ணையில் விவசாய புரட்சி ஏற்படுத்தியவர். கசப்பான ஆரஞ்சு பழத்தை இனிப்பாக்கி காட்டினார். இவர் கைபட்டு உயர்ந்த சோளக்கதிர், உயர் பருத்தி செடி முதலியன இவரது
முயற்சியினாலே உருவாகி வேளாண்மைத் துறையினரை வியப்படைய வைத்தது. விஞ்ஞானபூர்வமான சோளம் பயிரிடும் முறையை தெரிந்தவர். நம் நாட்டில் சோளம் நன்றாக விளைப்பதற்கான பல அறிவுரைகளை தந்தார். எப்படி அதிக விளைச்சல் தருவது என்ற செயல்முறை விளக்கங்களை தந்தார். விதையில்லாத பப்பாளி, ஆரஞ்சு, 19 அடி உயரம் 32 பெரிய காதுகள் கொண்ட சோள தாவரம் பிரம்மாண்டமான பருத்தி, துவரம்பருப்பு தாவரம் போன்றவை அவருடைய விவசாயப் பண்ணையில் உருவாக்கிய வியக்க வைத்த அதிசயமான விஷயங்களாகும். சி .வி.ராமன் விஸ்வேஸ்வரய்யா போன்ற மாபெரும் விஞ்ஞானிகளே அவர் பண்ணையை கண்டு சிலிர்த்தனர். ஏகப்பட்ட சாதனைகள் செய்த ஜி.டி. நாயுடு படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. இந்த சாதனையாளர் 1893 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பிறந்து,1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி மறைந்தார். ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை, இந்திய இளைஞருக்கு உதாரணமாகவும், ஊக்கம் தருவதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்