Ad Code

Ticker

6/recent/ticker-posts

பிள்ளையார்பட்டி விநாயகர் – பிள்ளை வரம் தரும் சக்திவாய்ந்த இடம்!

 பிள்ளையார்பட்டி என்று பெயர் வரக்காரணமே கற்பக விநாயகர் இந்த ஊரில் அமைந்து இருப்பது தான். இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயம், விநாயகர் வழிபாடுக்காக போற்றப்படும் ஆலயம். உலகின் பல இடங்களில் விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. விநாயகர் சிற்பங்களும் பல இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உலகத்திலேயே முதல் பிள்ளையாராக விளங்குவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பம் என்றால் மிகையாகாது.




உலகிலேயே இரண்டு கைகள் உடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப் படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. ஆனாலும் பிற்கால அணிகலன்களுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் பிள்ளையார்பட்டியில் பிற்கால அணிகலன்கள் இல்லாமல் பழைய வடிவத்தில் காணப்படுவது சிறப்பாகும். தெய்வீக சிற்பக் கலை வரலாற்றின் மூலமும், கல்வெட்டுகளின் சான்றுகளின் மூலமும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிற்பமே உலகத்தில் முதன்முதல் வடிவமாக போற்றப்படுகிறது.


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்கள், குன்றைக் குடைந்து கோவிலையும், கற்பக விநாயகர் சிற்பத்தையும், திருவீசர் என்னும் லிங்கத்தையும் இவ்வூரில் வடிவமைத்துள்ளனர். கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளது.


பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் முயற்சி செய்தனர். அவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் எடுத்துக்கொண்டனர். அசுரர்கள் பாம் பின் தலைபுறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை 'பஞ்ச தருக்கள்" என்று அழைக்கப்படுகின்றன.


இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். அதுபோல கேட்ட வரம் அனைத்தும் தருவதால் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 'கற்பக விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு இவர் 'தேசிய விநாயகம் பிள்ளையார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பிரதான சாலையில் இருந்து தெற்குநோக்கி செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால் அங்கே பிரமாண்டமான குளம் தென்படும்.


இந்த திருக்குளத்தில் கோவில் கோபுரத்தில் நிழல் விழுவது மிகச் சிறப்பாகும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் செல்கிறோம்.கிழக்கே இருந்து கோபுர தரிசனம் முடித்துவிட்டு உள்ளே செல்கிறோம். அங்கே சிவபெருமான் திருவீசுவராக காட்சியளிக்கிறார் . சிவகாமி அம்மை தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார்.



கற்பக விநாயகரோ வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்கள் கேட்கும் வரத்தினை அள்ளித்தருகிறார். இரண்டு கரங்களுடனும், அங்குச பாசங்கள் இல்லாமலும் இங்கு சிறப்பாக காட்சி தருகிறார். அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்து அருள் புரிகிறார். இந்த அமைப்பு எல்லாம் பிள்ளை யார்பட்டி கற்பக விநாயகரிடம் வித்தியாசமாக உள்ளது.



கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தை கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என அவரது கையெழுத்து உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் அமர்ந்து உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து தியானம் செய்யும் திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படு கிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.


விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே தான் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரை வணங்குபவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி என்கிறார்கள். இந்த கோவிலில் திருமண வரம் தரும் காத்தாயினி வழிபாடு, செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு சிறப்பானதாகும்.


இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரியது, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி விடுவார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் பல்வேறு பகுதியில் இருந்து கற்பக விநாயகரின் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வருட காலத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணாவிரதம் இருந்த பக்தர்கள், அதை நிறைவு செய்ய பிள்ளையார்பட்டி வந்து சேருவார்கள்.


விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று விநாயகர் சன்னிதியில் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபத்தில் கலந்து கொள்வது சிறப்பாகும். இந்த கும்பத்தினை தரிசனம் செய்யும் போது கேட்ட வரம் கிடைக்கிறது என்பதால் வருடத்துக்கு வருடம் கூட்டம் கூடுகிறது.


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு கணேசப்பெருமான் வாகனங்களில் திருவீதி உலா வருவார். இறுதி நாளில் தேர் பவனி நடைபெறும்.

வைகாசி மாதம் இவ்வூரின் காவல் தெய்வமான கொங்குநாச்சியம்மனின் கோவில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் இந்த ஆலயத்தோடு இணைந்தே திருவிழா நடைபெறும்.


இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் சுற்றி வருவார். திருக்கார்த்தி கையன்று விநாயகப்பெருமானும், உமாதேவி சமேத சந்திர சேகரப்பெருமானும் திருவீதி பவனி வர சொக்கப்பனை கொளுத்தப்பெறும். மார்கழித் திருவா திரை நாளன்று நடராஜப்பெருமான் வீதி உலா வருவார்.


இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தினத்தில் இருந்து மார்கழி மற்றும் தை மாதம் பூச நட்சத்திரம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காக கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைதிறந்து இருக்கும்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட் டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடி - திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.


Source 

தினத்தந்தி -வெள்ளிமலர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்