Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " நலந்தானா? "

 தமிழ் அறிவோம்!


" நலந்தானா? " 



"படித்தவன் பின்னால் பத்துபேர் இருந்தால் பைத்தியக்காரன் பின்னாலும் பத்துபேர் இருப்பார்கள் " என்பார்கள். ஆனால் பணம் இல்லாதவன் பின்னாலோ ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இனிப்பைத் தேடிதான் எறும்புகள் போகும். அதுபோல,  இருப்பவனைத் தேடிதான் எல்லோரும் போவார்கள். பொறுப்பில்லாதவனைக் கூட இந்த உலகம் மதிக்கும்.  ஆனால்,  பொருள் இல்லாதவனை ஒருநாளும் மதிக்காது. 


"உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்

தொண்டா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்

திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்

ஒருவரும் இவ்வுலகத்(து) இல். "


( நாலடியார் - 284 )


ஒருவன் இறந்து விட்டால்  அவன் உடம்பைத்  தின்பதற்குக்  காகங்கள் சூழ்ந்து மொய்த்துக் கொள்வது போல், ஒருவற்குச் செல்வம் உண்டான காலத்தில் அவனுக்கு ஆயிரம் பேர் ஏவல் புரிவோராய் வந்து கூடுவர்; ஆனால் வறுமையினால் உணவுக்காக ஒருவர் வண்டுபோல  பலவிடங்களிலும் அலையும்  காலத்தில் அவரைத் தீங்கில்லாமல் இருக்கிறீர்களா?  என்று நலம் விசாரிப்பவர் இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லை. ஆம்,  நலிந்தோரைப் பார்த்து நலந்தானா? என்று வினவுவார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை. நம்மிடம் நாலுகாசு இருந்தால்தான் நம்மைப் பார்த்து நான்கு பேராவது  நலந்தானா?  என்று கேட்பார்கள். இதுதான் இன்றைய சமூக நிலை.  


" கையில் ஒன்றுமில்லையேல் 

வாழ்க்கையில் ஒன்றுமில்லை " 


இவண் 

ஆ.தி.பகலன், 

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,  

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்,

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்