தமிழ் அறிவோம்!
" மதுவை மற "
ஒரு காட்டில் சிறிய முயல் ஒன்று தன் குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. ஒருநாள் இரை தேட வெளியே சென்றது முயல். தன் கண்ணில் பட்ட காய்கறிகளை எல்லாம் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குப் பசியோடு திரிந்து கொண்டிருந்த ஓநாய் ஒன்று, முயலைப் பார்த்ததும் துரத்தத் தொடங்கியது. முயலும் தன் உயிருக்குப் பயந்து வளைந்து நெளிந்து ஓடியது. முயலின் ஓட்டம் முடிவின்றி சென்றது. ஓநாய் நீண்ட நேரம் ஓட முடியாமல் களைப்படைந்தது. இறுதியாக ஒரு கம்பி வேலிக்குள் இருந்த சிறிய ஓட்டை வழியாகப் புகுந்து வேலியின் அந்தப் பக்கம் சென்று தப்பித்தது முயல். ஓநாயால் அந்தக் கம்பி வேலிக்குள் புகுந்து போக முடியவில்லை. " கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே " என்ற ஏமாற்றத்துடன் நின்றது ஓநாய். " நான் உன்னைவிட பலம் பொருந்தியவன். பெரிய கால்கள், வலிமையான உடல் எல்லாம் இருந்தும் சிறிய முயலாகிய உன்னை என்னால் ஓடி பிடிக்க முடியவில்லையே ஏன்? என்று முயலைப் பார்த்து கேட்டது ஓநாய். அதற்கு அந்த முயல், " உன் ஒருவேளை உணவுக்காக நீ என்னைத் துரத்தினாய். ஆனால் நானோ என் குட்டிகளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஒருவேளை நான் இறந்து விட்டால் என் குட்டிகளை யார் காப்பாற்றுவார்? என்று ஒவ்வொரு நொடியும் நினைத்து நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். உன் வயிற்றுக்காக நீ துரத்தினாய். என் குட்டிகளின் வாழ்க்கைக்காக நான் ஓடினேன். அதனால்தான் உன்னை விட எனக்கு வலிமை கூடியது " என்றது முயல்.
தன் குட்டிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருந்த முயலின் விடாமுயற்சியையும் , பொறுப்புணர்ச்சியையும் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவனும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவனின் பணி என்பது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது மட்டுமல்ல. தன் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு தலைமுறையைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான். இதை ஒவ்வொரு குடும்பத் தலைவனும் எண்ணிப் பார்க்க வேண்டும். குடித்துக் குடித்துத் தன் குடும்பத்தை அழிக்கும் குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருவது வேதனை அளிக்கிறது. மதுவால் பலரது மண வாழ்க்கை மண்ணாகிப் போய்விட்டது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைக் குற்றம் என்று சொல்லுகின்ற சட்டம், தன் குடும்பத்தைக் காப்பாற்றாமல் குடித்துக்குடித்து வாழ்க்கையை ஓட்டுவதைக் குற்றம் என்று ஏன் சொல்வதில்லை? " என் தந்தை நாள் முழுவதும் குடிக்கிறார். குடித்துவிட்டு வந்து என் தாயை அடிக்கிறார் . என்னைப் படிக்கவிடாமல் செய்கிறார். என் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்" என்று தன் தந்தையின் மீது குழந்தைகள் யாரேனும் குற்றம் சாட்டினால் அந்தத் தந்தைக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்ற அரசு முன் வரவேண்டும். இப்படி ஒரு கடுமையான சட்டம் இயற்றினால்தான் நாட்டில் உள்ள எண்ணற்ற குடிமகன்கள் திருந்த வாய்ப்பு ஏற்படும். ஆம், சட்டம் கடுமையானால்தான் குற்றம் குறையும். குடித்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதைவிட, அவர்கள் ஒரேயடியாகச் சாவது மேல்.
" களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. "
( குறள் - 929)
மதுவுக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த பல்வேறு அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக் கண்டுபிடிக்கத் தீவட்டி கொளுத்திக் கொண்டு தண்ணீருக்குள் சென்று தேடுவதும் ஒன்றுதான். "குடிகாரர்களை எல்லாம் அறிவுரையால் ஒருநாளும் திருத்த முடியாது " என்று வள்ளுவரே சொல்லிவிட்டார். தன் மனைவி மக்களைத் (குடும்பத்தைத் ) தூக்கி நிறுத்தாமல், மதுக்கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு அலைபவர்களை எல்லாம் திருத்த தூக்குக் கயிற்றால் மட்டுமே முடியும்.
" மனிதா!
மதுவை மற
மனைவி மக்களை நினை!
மாற வேண்டும் உன் போக்கு
இல்லையேல்
மறுநொடியில்
உன் கழுத்துக்கு வரும் தூக்கு!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்