Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " நெருப்போடு சேர்ந்த நெய்போல "

       தமிழ் அறிவோம்!


" நெருப்போடு சேர்ந்த நெய்போல " 



ஓர் ஊரில் இளம்வழுதி என்ற சிறுவன் ஒருவன் இருந்தான்.  எல்லோரிடமும் நன்றாகப் பழகும் பண்பாளன் . படிப்பில் கெட்டிக்காரன்.  பெற்றோர்க்குக்  கீழ்ப்படிந்து நடக்கின்ற நல்ல மகனாக இருந்து வந்தான்.  நாளடைவில் அவன் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.  அவனிடையே பல தீய பழக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன.  அதை அறிந்து அவன் பெற்றோர் மன வேதனை  அடைந்தனர் . நம் மகனுக்கு  நல்ல அறிவுரைகள் கூறியும் ,  நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்தும்  நல்ல முறையில் அல்லவா வளர்த்து வருகிறோம்.  பிறகு எப்படி இவனிடம் பல்வேறு தீய பழக்கங்கள் குடி கொண்டன?  என்று அவன் பெற்றோர் ஆராய்ந்தனர்.  ஒருவேளை அவனோடு சேர்ந்து பழகும் நண்பர்களிடம் இருந்து  இதுபோன்ற தீய பழக்கங்களை அவன்  கற்றுக் கொண்டானோ?  என்று ஐயமுற்றனர் . சரி இவனது நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இவனது நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வருகின்ற ஞாயிறு அன்று அவர்களை நம் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க   வேண்டும் என்று முடிவெடுத்தனர். "வருகின்ற ஞாயிறு அன்று  உன் நண்பர்களை நம் வீட்டுக்கு  அழைத்து வரவும். நாம் அவர்களுக்கு விருந்து கொடுப்போம்"  என்று  தன் மகனிடம்   கூறினர்.  அவர்கள் சொன்னது போலவே இளம்வழுதியும் தன்  நண்பர்களை  ஞாயிறு அன்று விருந்துக்கு அழைத்து வந்தான். அன்று நாள் முழுவதும் இளம்வழுதியின் வீட்டிலேயே அவர்கள்  இருந்தனர் இளம்வழுதியின் நண்பர்கள்  ஒவ்வொருவரையும்  இளம்வழுதியின் பெற்றோர் தனித்தனியாகக் கூர்ந்து நோக்கினர்.  அவர்களது பழக்கவழக்கங்களை ஆராய்ந்தனர். அவர்களிடம் பல தீய பழக்கங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  அவர்களின் பேச்சும், நடவடிக்கையும்  அவர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்கள் என்பதை எடுத்துக் காட்டின. இவர்கள் மூலமாகவே தன் மகனும் பல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறான் என்பதை இளம்வழுதியின் பெற்றோர் உணர்ந்து கொண்டனர்.  இனி நம் பிள்ளையை இவர்களுடன் சேரவிடக்கூடாது என்று முடிவு செய்தனர். இளம்வழுதியின் நண்பர்களுக்கு சிறப்பான முறையில் விருந்தோம்பல் செய்து அவர்களை அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்ற பிறகு இளம்வழுதியிடம்  அவன் நண்பர்கள் பற்றி பல்வேறு வினாக்கள் தொடுத்து அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டனர்.    இரவு உணவு உண்ண இளம்வழுதியை அவன் அம்மா அழைத்தாள் . அவன் உண்பதற்காக உணவு கொடுத்தாள். அதில் ஒரு சில உணவுப் பொருட்களை அவன் ஒதுக்கி வைத்தான். " ஏன் இந்த உணவுப் பொருட்களை ஒதுக்கி வைக்கிறாய்?  என்று இளம்வழுதியிடம் அவன் அம்மா கேட்டாள்.  அதற்கு அவன் " இந்த உணவுப்பொருட்கள் நன்றாக இல்லை. அதனால்தான் அவற்றை  வேண்டாம் என்று  ஒதுக்கி வைத்தேன்"  என்றான் இளம்வழுதி.  " நன்றாக இல்லை என்றால் நாம் அதை கண்டிப்பாக ஒதுக்கிவிட வேண்டும். அது உண்ணும் பொருளாக இருந்தாலும் சரி,  உயிருக்கு உயிராக பழகும் நண்பர்களாக இருந்தாலும் சரி. அதுதான் உடம்புக்கும் நல்லது. உனக்கும் நல்லது " என்று இளம்வழுதியிடம்  அவன் அம்மா கூறினாள்.  தன் அம்மா தன்னிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆராய்ந்து பார்த்தான் இளம்வழுதி . தான் பழகும் நண்பர்கள் நல்லவர்களாக இல்லை என்பதையே தன் அம்மா தன்னிடம் கூற வருகிறார்  என்பதை இளம்வழுதி உணர்ந்து கொண்டான். "  இவர்களைப் போன்ற நண்பர்களுடன் இனி நான் சேரமாட்டேன் " என்று தன் அம்மாவிடம் உறுதியளித்தான் இளம்வழுதி.  அன்றுமுதல் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து பழக ஆரம்பித்தான். படிப்படியாக நல்ல பிள்ளையாகவும்,  படிப்பாளியாகவும் மாறினான் இளம்வழுதி.  சேர்க்கை சரியில்லை என்றால் ஒருவன் வாழ்க்கையே சரியில்லாமல் போய்விடும் என்பதை நாம் உணரவேண்டும் .  "பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்"  என்பார்கள். அது உண்மைதான்.  சாக்கடையோடு சேரும் பூ மணக்காது. அது  நாறிவிடும் என்பதும் உண்மையே.  ஆகையால் நல்லவர்களோடு நாம் சேர்ந்திடுவோம்.  நல்ல நிலையை நாம் அடைந்திடுவோம். 


" நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் 

எரிப்பச்சுட்டு எவ்வநோய்  ஆக்கும் - பரப்பக் 

கொடுவினையர் ஆகுவர் கோடாரும் கோடிக் 

கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து. " 


( நாலடியார் - 124)


நெய் உணவில் சேர்ந்தால் அது மணமும் சத்தும் தரும்.  நெருப்பிலிட்டுக் காய்ச்சும் நெய் தெரித்து உடம்பில் பட்டால், அது உடம்பைச் சுட்டுப் புண்ணாக்கிவிடும். அதுபோல,  நல்லொழுக்கம் தவறாதவர்கள் நல்லவர்களோடு சேர்ந்தால்  மற்றவர்களுக்குப் பயன்படும்படியான வாழ்க்கையை வாழ்வர். அதுவே அவர்கள் தீயவர்களுடன் சேர்ந்தால் தன்னிலை கெட்டு,  மற்றவர்கள் வாழ்க்கையையும் கெடுக்கின்ற தீயவர்களாய் மாறி விடுவர். 


நம் குழந்தைகள்,  நன்றாகப் படிக்கின்ற பிள்ளைகளோடும்,  நல்ல பண்புள்ள பிள்ளைகளோடும்தான் சேர்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். தீய பழக்க வழக்கமுள்ளவர்களோடு ஒருநாளும் சேரக் கூடாது என்று சொல்லி  அவர்களைக் கண்டித்து வளர்க்க வேண்டும்.  ஆம்,  கண்காணித்தும், கண்டித்தும் வளர்க்கப்படும் குழந்தைகளே, நாளை  சிறந்த மனிதர்களாக இருப்பார்கள் .


( குறிப்பு :  ஞாயிற்றுக்கிழமை. உங்கள் பிள்ளைகளின் நண்பர்களை   விருந்துக்கு   அழையுங்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கண்காணியுங்கள் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்களோடு உங்கள் பிள்ளைகளைப் பழக விடுங்கள். அவர்கள் தீய பழக்கவழக்கம் உடையவர்களாக இருந்தால் அவர்கள் நட்பை அடியோடு கைவிடச் சொல்லுங்கள் ) 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,  

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்