Ad Code

Ticker

6/recent/ticker-posts

கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்

 



இந்தியா ஒரு விவசாய நாடு . விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள் . ஆனால் , தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும் , கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள் . வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம் மைகளாக வாழ்க்கையை ஓட்டும் எத்தனையோ படித்த இளைஞர்களைக் காண முடிகிறது .


நன்கு படித்த இளைஞர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டினால் தான் புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் செலுத்தி , நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் . தற்போது ஏழைப் பெண்கள் மற்றும் கிராமப்புற நிலமில்லா கூலித் தொழிலாளிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர் .



 கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் , சில சமயம் இழப்பையும் ஏற்படுத்துவதால் கால்நடை வளர்ப்போரின் ஆர்வம் குறைந்து விடுகிறது . கால்நடைப் பெருக்கத்தைக் குறைக்கும் தொற்று நோய்களைப் போல , ஈக்கள் , கொசுக்கள் போன்ற புற ஒட்டுண்ணிகள் தாக்கம் இன்னொரு புறம் இருக்கிறது . இதனால் , கால்நடைகள் போதுமான ஓய்வு எடுக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவதால் , உற்பத்தியும் குறைந்து விடுகிறது .


இந்தப் புற ஒட்டுண்ணிகளை அழிக்க நிறைய இரசாயன மருந்துகள் உள்ளன . ஆனால் , அவை விலை அதிகமாக இருப்பதுடன் , கால்நடைகள் தங்களின் உடல்களை நாக்கால் தேய்க்கும் போது இந்த இரசாயன , செயற்கை மருந்துகள் அவற்றின் உடலுக்குள் சென்று பாதிப்பை உண்டாக்கும் . இதைத் தடுக்க , எளிமையான இயற்கை மருத்துவ முறை உள்ளது .


 கற்பூரம் , மஞ்சள் , வேப்பிலை , எலுமிச்சை , தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு மிக எளிதாக , இயற்கை முறையில் குறைந்த செலவில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம் . ஒரு மாட்டுக்கு ஆகும் செலவு ரூ .30 மட்டுமே . இந்தக் கலவையை ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் .




 மூன்று கற்பூர வில்லைகள் , ஒரு எலுமிச்சம் பழம் , 15 கிராம் மஞ்சள் தூள் . ஒரு கைப்பிடி வேப்பிலை , 15 மில்லி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும் . நீரைச் சேர்க்கக் கூடாது .


பிறகு , இந்தக் கலவையை 30 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு கலக்கி அடைத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம் . இந்தக் கலவையைச் சிறிதளவு பஞ்சில் எடுத்து , மாலை நேரத்தில் மாடுகளின் பின்பகுதி , அடிப்பகுதி , காது மடல்களில் தேய்த்துவிட வேண்டும் . இந்த மருந்து , உண்ணிகளையும் , பிற கொசு . ஈக்களையும் உடலில் ஒட்ட விடாமல் செய்து விடும் . இது மிகவும் எளிதாகச் செய்யக்கூடிய வீட்டு மருத்துவம் . 


கால்நடைகளை உறங்க விடாமல் செய்யும் ஒட்டுண்ணிகளை இந்த மருந்தைக் கொண்டு அழித்து கால்நடைகளைக் காக்கலாம், வளம் பெருக்கலாம் . 


மரு . கோ.கலைச்செல்வி , 

மரு . எம்.வித்யா , 

மரு . என்.தானியேல் ஜாய் சந்திரன் , 

மரு . அ.தங்கவேலு , 

கால்நடை மருத்துவக் கல்லூரி , சென்னை .

கருத்துரையிடுக

0 கருத்துகள்