Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " ஞானசம்பந்தர் கொடுத்த ஞானப்பால் "

 தமிழ் அறிவோம்!


" ஞானசம்பந்தர் கொடுத்த ஞானப்பால் "



சைவ சமயக் குரவர்கள்  நால்வருள் ஒருவர்தான் திருஞானசம்பந்தர் . இவர் சீர்காழியில் பிறந்தவர். அகவை மூன்று ஆகும்போது உமையவள் கொடுத்த ஞானப்பாலைக் குடித்தார்.  அதனால் ஞானம் பெற்றார்.  "ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தர் " என்பது எல்லோர்க்கும் தெரிந்த செய்தியாகும். " ஞானசம்பந்தர் கொடுத்த ஞானப்பால் " பற்றிய செய்தியோ இதுவரை யாருமே அறிந்திலர். " யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதற்கேற்க தான் ஞானப்பால் குடித்ததுபோல் உலக மக்கள் அனைவரும் ஞானப்பால் குடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக நமக்கெல்லாம் ஞானப்பாலைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். 

" நாளும் இன்னிசையால்  தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் " என்று சுந்தரரால் போற்றப்பட்டவர் திருஞானசம்பந்தர்.  அவர்  தமிழைக் காக்க பாடிய பாடல்கள் மொத்தம் 4181 ( கிடைக்கப் பெற்றவை)  ஆகும். அவற்றில் உலக மக்களைக் காக்க அவர் பாடிய பாடல்கள் இரண்டு ஆகும். அந்த இரண்டு பாடல்களையும், அவற்றின் சிறப்புகளையும் இப்போது காண்போம்.


தமிழின் சிறப்பெழுத்து " ழகரம் " ஆகும். இந்த ழகரத்தை ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் போதெல்லாம் நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்பட்டு நம் அறிவும், உடலும் பன்மடங்கு ஆற்றல் பெறுவதாக அறிவியல் ஆய்வுகள் அண்மையில் உறுதி செய்துள்ளன. இதனால்தான் நம் முன்னோர்கள் ழகரத்தைச் சிறப்பெழுத்து என்றும்,  நம் உடலைச் சீர்படுத்தும் எழுத்து என்றும் போற்றினர். ழகரத்தை அடிக்கடி ஒலிக்க வேண்டியே  ழகரம் இடம்பெறும் வகையில் எண்ணற்ற சொற்களை உருவாக்கினர். இதை தான்பெற்ற ஞானத்தால் உணர்ந்து கொண்ட ஞானசம்பந்தர் மிகுதியாக  ழகரம் இடம்பெறும் வகையில் இரு பாடல்களை உருவாக்கினார்.  


"பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழமுட லாளருணரா 

ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாம் 

கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக் 

காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே " 


( திருஞானசம்பந்தர், மூன்றாம் திருமுறை, தேவாரம் - 3523) 


புறச்சமயத்தார்கள் இறைவனை உணராதவர்களாய் இருக்கிறார்கள். ஏழிசையும்,  யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமையவளை உடனாகக் கொண்டு சிவன் வீற்றிருக்கும்  இடம்தான் காழியூர் ஆகும். கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும், மேலுலகில் வாழ்கின்ற இந்திரனும் தேவர்களும் வாழும் பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று, தன் குற்றம் நீங்குமாறு  இறைவனை வழிபட்டு காளி அருள்பெற்ற செயலைப் பல ஊழிக்காலமாகப் பேசப்பட்டு வரும் பெருமையுடைய நகரம் காழியூர் ஆகும்.


இப்பாடலில் பாழி, வேழ, பாழ,  சூழ, ஏழின், யாழின், மொழி, யேழை, வாழும், தாழும்,  கீழிசை, வாழரசு, சூழரசு, வாழ,  காழியசில் , காழிசெய, வேழுலகில், ஊழி, காழிநகர்   என மொத்தம் 19 முறை ழகரம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 


"ஒழுகல்அரிது அழிகலியில் உழிஉலகு பழிபெருகு வழியைநினையா

முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்

தொழுதுஉலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவும்உரை கழுமலநகர்ப்

பழுதில்இறை எழுதும்மொழி தமிழ்விரகன் வழிமொழிகண்  மொழிதகையவே!"


( திருஞானசம்பந்தர், மூன்றாம் திருமுறை, தேவாரம் - 3525 )


" நல்லொழுக்கத்தைப் பற்றி ஒழுகுவது மிகவும் அரிதாக மாறிவிட்ட இந்தக் கலியுகத்தில், தருமம் நாளுக்கு நாள் அழிகின்றது. மனிதர்களால் பெருகும் பழிபாவங்களை நினைத்து, வருந்தியவராக, தனது உடல் முழுவதும் ரோமங்கள் கொண்டவரான உரோமச முனிவர், தனது சீடர்களுடன் தங்கி சிவபெருமானைத் தொழுத இடம்தான்  சீர்காழி எனும் திருத்தலம். ,  உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கி சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்பட்டது  இத்திருத்தலம் . இத்திருத்தலத்தை வணங்குவோர்க்குத் துன்பம் இல்லையாம்.  இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றி , குற்றமற்ற சொற்களை உடைய தமிழ்மொழியைக் கொண்டு தமிழில் வல்லவனாகிய. ஞானசம்பந்தன் அருளிய  இப்பாடல்களைப் பாடிப் பயன்பெறுங்கள் " என்கிறார் ஞானசம்பந்தர். 


இப்பாடலில்  ஒழு, அழி, உழி, பழி, வழி, முழு, எழு, தழுவு, குழு, கெழுவு, தொழுது, இழுகு, அழியும், கழுவு, கழுமல, பழுது, எழுது, மொழி, தமிழ், வழி, மொழி, மொழி என மொத்தம் 22 முறை 'ழ'கரம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 


இந்தப் பாடலின் பொருள் பற்றிய ஆய்வு நமக்குத் தேவையில்லை.  மிகுதியான ழகரம் இடம்பெற்றுள்ளதை மட்டும் இங்கு நோக்குவோம். காலை மாலை என இருவேளையும் மருந்து உட்கொண்டு நம் உடலையும் , உயிரையும் காப்பதைப்போல ,  தமிழ் கொடுத்த அமிழ்தமாகிய "ழகரம் " மிகுதியாக இடம்பெற்ற  இப்பாடல்களை காலை மாலை என இருவேளையும் பாடி   நம் உடலையும், உயிரையும் காப்போம்.  "ழகரம்"  மிகுதியாக இடம்பெற்ற இந்த இரு பாடல்களே "ஞானசம்பந்தர் நமக்குக் கொடுத்த ஞானப்பால் " ஆகும். இப்பாடல்களைப் பாடி பாடி ஞானப்பாலைப் பருகுவோம். அறிவையும், அழியாத உடலையும் பெறுவோம். ஆம், மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப நிலையை அடைவோம்.  


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்,

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்