தமிழ் அறிவோம்!
" கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக "
இயற்கையே மனித இனத்தைப் படைத்தது. மனிதனே கடவுளைப் படைத்தான். மனிதனின் எண்ணங்களில் வேற்றுமை வளர வளர கடவுள்களின் எண்ணிக்கையும் பெருகின. கடவுள்களின் எண்ணிக்கை பெருக பெருக, கடவுளை வைத்து உருவாக்கப்பட்ட மதங்களின் எண்ணிக்கையும் பெருகின. " வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் " என்பதைப் போல " நாட்டுக்கொரு மதம் வளர்ப்போம் " என்ற நிலை உருவாகிவிட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப கடவுள்களின் எண்ணிக்கையும் , மதங்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டன. ஆராய்ந்து பார்த்தால் அறிவுக்கு உகந்தவையாக ஒன்று கூட இல்லை. இதை உணர்ந்துதான் இவையெல்லாம் "கலையுரைத்த கற்பனைகள் " என்று சாடினார் வள்ளல் பெருமான்.
"கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. "
( வள்ளலார், திருவருட்பா - 3768 )
"சமயவாதிகளும், கலைஞர்களும் தங்கள் கற்பனைகள் மூலமாகவும் , கலைகள் மூலமாகவும் ( புராணம், இதிகாசம் உள்ளிட்ட சமய நூல்கள் வாயிலாக) உரைத்தவற்றை எல்லாம் உண்மையென்று எண்ணிக்கொண்டு இருக்கும் கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் மண்ணில் மறைந்து போக வேண்டும். உலகை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் உண்மை நெறியான சன்மார்க்க நெறி மட்டுமே நிலைபெற வேண்டும். சன்மார்க்க நெறியில் உலகத்தவர் வாழ்ந்தோங்கக் கருதி, அவர்களை வழிப்படுத்தும் பணியை எனக்களித்தாய். அதற்காக திருவுள்ளம் கொண்டு எனக்கு நினது திருவருள் ஞானத்தையும் , கருணையையும் வழங்கி அருளினாய். எவ்வகை இடருமின்றி இவ்வுலகைச் சன்மார்க்க நெறியில் புகுத்திட இதுவே தகுந்த காலம் என்ற உண்மையை எனக்கு உரைத்தாய். உன் எண்ணத்தை ஈடேற்ற என்பால் வந்தணைந்து அருள் செய்வாயாக . பேருண்மையை உணர்த்தி கல்போன்ற என் மனத்தை உருக்கி மரணம் இல்லாப் பெருவாழ்வை ( திருவமுதம் ) எனக்களித்தவனே . சித்தர்களின் மணிமுடியாய் விளங்கி ஞான நடம்புரியும் நாயகனே." என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் வேண்டுகிறார் வள்ளல் பெருமான்.
கட்டுக்கதைகளுக்குக் கண் வைத்து, கால் வைத்து உருவம் கொடுக்கின்ற உத்தமர்கள் வாழ்கின்ற இந்த உலகத்தில்தான் , மனிதர்களுக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வை அளிக்கும் " சமரச சுத்த சன்மார்க்கம் " என்னும் உண்மை நெறியை எடுத்துரைத்தார் வள்ளல் பெருமான். "மனிதர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்களும், சாதி சமயங்களும் மண்ணோடு மண்ணாகப் போக வேண்டும் " என்றார். "பொய்ம்மை அழிய வேண்டும் . மெய்ம்மையே உலகை ஆள வேண்டும். " என்று விரும்பினார். அவர் எண்ணம் ஈடேற வேண்டுமென்றால் எல்லாச் சமயங்களையும் தூக்கி எறிய வேண்டும். சன்மார்க்கத்தை மட்டுமே நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும். இந்த உலகில் சன்மார்க்க நெறி மட்டுமே எல்லோர்க்கும் பேரின்ப வாழ்வை அளிக்கும். ஆகையால் சன்மார்க்கத்தில் இணைவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்