தமிழ் அறிவோம்!
" விழியிலார்க்கு ஏது விளக்கு? "
நாள் முழுவதும் உழைத்தும் ஆயிரம் ரூபாய் கூட ஈட்ட முடியாதவனும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டுபவனும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். கட்டாந்தரையில் படுத்து உறங்குபவனும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். கட்டி தங்கத்தின்மேல் படுத்து உறங்குபவனும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். அறுசுவை உணவு உண்பவனும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். அரை வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லாதவனும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். ஏன் இந்த முரண்பாடு? இந்த முரண்பாட்டைத் தடுக்கவும், தட்டிக் கேட்கவும் இயலாத அரசு எதற்கு? அரசியலமைப்பு சட்டம் எதற்கு? பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் மேலும் ஏழை ஆகிறான். ஏழைகளுக்கு ஒரு சட்டம். ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு ஒரு சட்டம். இந்த நாட்டின் 90 விழுக்காடு செல்வங்களை வெறும் 10 விழுக்காடு மக்கள் ( செல்வந்தர்கள்) உரிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் 10 விழுக்காடு செல்வங்களை மட்டுமே 90 விழுக்காடு மக்கள் ( ஏழைகள்) உரிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த வேறுபாட்டைக் களைவதற்கு அரசு என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா ?
நாடு விடுதலை பெற்றவுடனேயே மொத்த நிலங்களையும், மொத்த செல்வங்களையும் அரசு கையகப்படுத்தி இருக்கவேண்டும். சட்டம் எப்படி எல்லோர்க்கும் சரிநிகரோ அதுபோலவே நாட்டின் நிலங்களும், செல்வங்களும் சரிநிகர் என்பதை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்க வேண்டும். அதனால் நாட்டுமக்கள் அனைவருக்கும் உரிய பங்கானது சரியான அளவில் கிடைத்திருக்கும். ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை தோன்றியிருக்காது. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்ததுபோல, தனியாள் வருவாய் உச்சவரம்பு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும். தேசிய தனியாள் வருமானத்தைவிட இருமடங்கு கூடுதலாக ஒருவர் வருவாய் ஈட்டினால் அந்த வருவாய் முழுவதும் அரசுக்குச் சொந்தமாகும் என்று சட்டம் இயற்ற வேண்டும். அப்படியொரு சட்டம் இயற்றினால் இந்த நாட்டில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இருக்காது. எல்லோருமே ஒர் நிறையில் இருப்பார்கள். எல்லோருமே இந்நாட்டின் மன்னர்களாக இருப்பார்கள். செல்வம் எல்லோர்க்கும் பொதுவானது. எல்லோர்க்கும் பயன்தர வேண்டியது. அது ஓரிடத்திலேயே குவிந்து கிடக்கக் கூடாது. அதுவும் அன்பில்லாதவர்கள் கைகளில் இருந்தால் அது எதற்குமே பயன்படாது.
"இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும்அவற்கு என்செய்யும்? - நல்லாய்!
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்?
விழியிலார்க்கு ஏது விளக்கு?"
( சிவப்பிரகாச சுவாமிகள், நன்னெறி - 15)
நற்குணம் மிக்க நங்கையே! கேள்! மொழிகள் குறித்த ஞானம் இல்லாத ஒருவனிடம் மூத்த அறிஞர்கள் பலர் எழுதிய நூல்கள் இருந்தும் என்ன பயன்? படிக்கவே தெரியாத அவன் அந்த புகழ்மிக்க நூல்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான்? அது போல கண்கள் இரண்டிலும் பார்வையில்லாத மனிதர் கைகளில் விளக்கு இருந்தால் என்ன?, இல்லாவிட்டால் என்ன?, அவன் பார்வையே இருள் படிந்தல்லவா இருக்கும்?
அதுபோல, அன்பு எனும் உணர்வு இல்லாத ஒரு மனிதனுக்கு நல்ல வீடுவாசல், பெரிய இடமும் , நிறைந்த பொருளும் இருக்கிறது. ஏவியதைச் செய்ய ஏராளமான பணியாளர்கள் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் இருந்தும் அன்பு எனும் உணர்வு இல்லாதவனுக்கு இவற்றால் என்ன பயன் விளையும்? ஒரு பயனும் விளையாது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்