Ad Code

Ticker

6/recent/ticker-posts

கிளியூர் மலையமான்கள்




திருமுடிக்காரி. திருக்கோலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிநடத்திய மலைய மன்னன்.

முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடினார்கள் என்பதை நற்றிணைப் பாடல் (170) ஒன்று கீழ்க்காணும் வகையில் புகழ்ந்துப் பேசுகிறது:

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு   

காரியின் வழித்தோன்றல்கள், திருக்கோலூரையும் சுற்றுவட்டப் பகுதிகளையும் வழிநடத்தினர். இம்மலையமான்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கிளியூர் மலைய மான்களாவர்.

இவர்கள் குறித்து ஆய்வறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (நூல்: பிற்கால சோழர் சரித்திரம்) தரும் தகவல்கள் பின்வருமாறு:

கிளியூர் மலையமான்கள் முதற்குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டு வந்தமை பற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும் மலாடு எனவும் வழங்கப்பட்டு வந்தது உணரற்பாலது.

இவர்கள் சேதிராயர் எனும் பட்டமுடையவர்கள். கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். குலோத்துங்கச் சோழனது ஆட்சி காலத்தில் சேதி நாட்டிலிருந்து அரசாண்ட சிற்றரசர்கள்.

கிளியூர் மலையமான் பெரிய உடையானான இராசராச சேதிராயன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுல ராசன், சூரியன் மரவனான இராசேந்திர சோழ மலையகுல ராசன், சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்.

இவர்களில் இறுதியில் குறிப்பிடப்பெற்ற மூவரும் உடன்பிறந்தாராகவும் இராசேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.

இவர்கள் எல்லோரும் குலோத்துங்கச் சோழனது ஆட்சியின் முற்பகுதியில் இருந்தவராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலிருந்த சேதி நாட்டுச் சிற்றரசன், கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான இராசேந்திர சோழச் சேதிராயன் என்போன். இவன் திருக்கோவலூரிலுள்ள திருமால் கோயிலுக் கும் சித்தலிங்கமடத்தில் உள்ள சிவன் கோயிலுக்கும் நிவந்தங்கள் அளித்துள்ளான்.

மேலும், இறையூரன் இராசராச சேதிராயன் என்பவனைப் பற்றிச் சொல்லும்போது, ‘குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனாயிருந்தமையோடு அவன்பால் பேரன்புடையவனாகவும் இருந்தவன் என்கிறார் சதாசிவத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவலூர், சித்தலிங்கமடம் மட்டுமின்றி ஜம்பை, அரகண்ட நல்லூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களிலும் கிளியூர் மலையமான்களின் கொடை குறித்தக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த மலையமான்கள் வன்னிய வகுப்பினர் என்பதற்கானக் கல்வெட்டுச் சான்று இருப்பதாகத் தெரிவிக்கிறது தமிழ் வளர்ச்சி இயக்ககம் வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு வரலாறு சோழ பெருவேந்தர் காலம் எனும் நூல்.

நாட்டின் தலைநகராக இருந்ததோடு, ஆட்சி நடத்தும் தலைவர்களையும் கொடுத்த ஊர் கிளியூர்.


இப்போது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில், பெரியசெவலை அருகில் சின்னஞ்சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது..!

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்