Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்| இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்|காலக் கோடு|இந்திய வரைபடம்|உலகவரைபடம்| 10 Class | Social Science | Key Questions and Answers for Second Revision Exam | Timeline | Map of India | World Map

 

சுருக்கமான விடையளி

1. முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  1. முசோலின் – இத்தாலி
  2. ஹிட்லர் – ஜெர்மனி
  3. பிராங்கோ – ஸ்பெயின்

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக  நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாலும், திறமையாலும், உணர்ச்சி மிக்க் பேச்சுக்களாலும், ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்து செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களை தன் பக்கம் ஈர்த்தார்.

3.  முத்து துறைமுக நிகழ்வை விவரி

  • 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும்தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுக்கும்போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர்விமானங்களும் அழிக்கப்பட்டன. அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
  • இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.

 

4. ’மண்’ – வரையறு

  • மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
  • பல்வேறு காலநிலைச் சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது.
  • மண்ணானது இடத்திற்கு இடம் வேறுபடும்.

5. இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்பு நில மண

6. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.

உருவாக்கம்:

தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.

வேதியியல் பண்புகள்:

கால்சியம், மக்னீசியம், கார்போனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன.

மண்ணின் தன்மைகள்:

ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.

வளரும் பயிர்கள்

பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு

7. ’வேளாண்மை’–வரையறு.

வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

 

8. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?

  • மாநில நிர்வாகத்தின் அரசிலமைப்புத் தலைவர் ஆளுநர்.
  • மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது
  • மாநில சட்டமன்றமோ அல்லது உயர்நீதி மன்றேமா ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது
  • இந்திய அரசியலமைப்பு, மாநில நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஆளுநருக்கு வழங்கிறது.
  • ஆளுநர் சட்ட மன்றத்தைக் கூட்டவும், சட்ட மன்றத்தைக் கலைக்கவும் உரிமை பெற்றுள்ளார்
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பம் இட்டால் மட்டுமே சட்டமாகும்.
  • மாநில அரசைக் கலைக்க இவர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
  • குடியரசுத்தலைவரின் ஆட்சியின் போது மாநிலத்தை ஆளுநர் நிர்வாகம் செய்தார்.

9. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
  • மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

10. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிமன்றத்தின் அதிகாரங்கள் யாவை?

  • சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
  • அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
  • முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
  • மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் `2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

11. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிநது கொண்டதென்ன?

  • உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
  • நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

 12. உலகமயமாக்கல் என்றால் என்ன?

உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

13. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.

  • மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
  • வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
  • உலகமயமாக்கல் வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
  • புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்
  • இது பண்டங்களை தடையற்றதாகவும் தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.

 

 விரிவான விடையளி

 

1. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க

உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:-

இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பலமாற்றங்களை ஏற்படுத்தியது. வல்லரசுகள் தலைமையிலான அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது. ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது. மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப் பரவல்:-

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணுஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன. பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள்:-

பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

காலனி நீக்கச் செயல்பாடு:-

காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர். அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.

 

 

2. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

இந்தியாவில் 8 மண் பிரிவுகள் உள்ளன

அவை

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

1. வண்டல் மண்

  • சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
  • புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
  • கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி சமவெளிப் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்

2. கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
  • டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம்,
    தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

3. செம்மண்

  • பழமையான படிக பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
  • இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுவதால் சிவப்பு நிறமாக காணப்படுகிறது
  • தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்க்கண்ட் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள் பயிரிட ஏற்ற மண்

4. சரளை மண்

  • வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching) காரணமாக உருவாகிறது.
  • இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்ஸைடுகளால் உருவானது.
  • உயரமான மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளுவதில்லை
  • அசாம் குன்றுகள்,கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிட ஏற்ற மண்

5. காடு மற்றும் மலை மண்

  • பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது.
  • காலநிலைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
  • இம்மண்ணில் செம்மையான மணல் மற்றும் பாறைத்துகள்கள் கலந்து காணப்படுகிறது.
  • மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

6. வறண்ட பாலை மண்

  • வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது.
  • வெளிர் நிறமுடையது, தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது.
  • இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • நீர் பாசன வசதியுடன் தினை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.

7. உப்பு மற்றும் கார மண்

  • சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
  • வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண், உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது
  • ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது
  • அதிக காரத்தன்மை காரணமாக இங்கு பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை.

8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

  • அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது
  • இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மை உடையது
  • கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள், ஒடிசா தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகள், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம். போன்ற பகுதிகளில் காணப்படுகிறது
  • நெல், சணல் முதலியன பயிரிட ஏற்ற மண்

3. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோகக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பக்ரா நங்கல் அணை

  • சடெலஜ் ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று
  • பக்ராநங்கல் அணை உலகின் மிக உயர்ந்த அணைகளில் ஒன்று
  • 10,000 மில்லியனுக்கு அதிகமான தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது
  • பஞ்சாப், ஹரியானா மற்றும் இராஜஸ்தான் பகுதிகள் பயனடைகின்றன.

ஹிராகுட் திட்டம்

  • மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று.
  • இது உலகின் மிக நீளமான அணை

அதன் நோக்கங்கள்

  • நீரின் விரவான ஓட்டத்திலிருந்து ஏராளமான நீர் மின் சக்தியை பயன்படுத்துதல்.
  • வெள்ளம்  மற்றும் அதன விளைவாக எற்படும் அழிவைக் கட்டுப்படுத்ததல்.
  • பூரி மற்றும் கட்டாக் மாவட்டங்களுக்கு கால்வாய் வழியாக நீர்பாசனம்
  • நீர் போக்குவரத்தை மேம்படுத்துதல்
  • வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி
  • நிலையான மற்றும் உறுதியான மின்சாம் மூலம் விரைவான தொழில்மயமாக்கல்

 

4. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.

தீவிர வேளாண்மை

  • தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகும்.
  • சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்

தோட்ட வேளாண்மை

  • தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
  • இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது.
  • தேயிலை, காபி, இரப்பர், மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.

 

5. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

அமைச்சரவை தொடர்பானவை

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை

கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்றம் தொடர்பானவை

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

6. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்கம் விவரி.

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக்கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
  • தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றார்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • ஆங்கிலோ–இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
  • மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.

7. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.

  • மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து அனைத்து முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
  • முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
  • மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
  • மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
  • ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
  • ஆண்டு வரவு-செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

 8.உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

வேறுபடுத்துக

1. வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்

வெள்ளப் பெருக்கு கால்வாய்

  • இவ்வகை கால்வாய்களில் ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது.
  • இவ்வகை கால்வாய்கள் வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்பப் பயன்படுவதோடு மழைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

வற்றாத கால்வாய்

  • இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும்.
  • கால்வாய் பாசனத்தில் 60 சதவிகிதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன.

2. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

வண்டல் மண்

  • சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
  • புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
  • சமவெளிப் பகுதிகள், ஆற்றுப் பள்ளதாக்குகளிலும் காண்ப்படுகிறது
  • நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்

கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
  • கருப்பு நிறமாக உள்ளது
  • பீடபூமி பகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

 

காரணம் கூறுக

1. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.

காரணம்:-

இந்திய வேளாண்மை 50 சதவீதத்திற்கும் மேலான மக்களக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் மொத்த வருமானத்தில் 25 சதவீதத்தையும் நாட்டிற்கு அளிக்கிறது.

2. மழைநீர் சேமிப்பு அவசியம்.

காரணம்:-

இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால் கிடைக்கும் நீரை சேமிப்பது அவசியம்

காலக் கோடு

1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை

1938 - மீயூனிச் உடன்படிக்கை

1939 - இரண்டாம் உலகப்போர் தொடக்கம்

1941 - முத்துத் துறைமுகம் தாக்குதல்

1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு


உலகவரைபடம்

இத்தாலி

ஜெர்மனி

ஹங்கேரி

ருமேனியா

பல்கேரியா

ஜப்பான்

பிரான்ஸ்

இங்கிலாந்து

போலந்து

ரஷ்யா

பெல்ஜியம்

ஷிரோஷிமா

நாகசாகி

ஹவாய் தீவு

மாஸ்கோ

சான்பிரான்சிஸ்கோ






இந்திய வரைபடம்











 

 





 

கருத்துரையிடுக

0 கருத்துகள்